47 பேரின் உயிரை பறித்த கனமழை - நிலச்சரிவு.. அபாய நிலையில் நேபாளம்.. பொதுமக்கள் கடும் அவதி
காத்மாண்ட்: அண்டை நாடான நேபாளத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி 47 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். பல சாலைகள், பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. கடந்த மாதம் இங்கு இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர். இது வன்முறையானது. இதையடுத்து வேறு வழியின்றி சீனா ஆதரவில் இருந்த பிரதமர் கேபி ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதன்பிறகு புதிய பிரதமராக சுசீலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படியான சூழலில் தான் தற்போது நேபாளம் இயற்கை பேரிடரால் அதிக பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு பார்டரில் உள்ள இலம் மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 35 பேர் பலியாகி உள்ளனர். இதனை ஆயுதப்படை பிரிவின் செய்தி தொடர்பாளர் காளிதாஸ் தவ்போஜி உறுதி செய்துள்ளார். அதேபோல் மின்னல் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல இடங்களில் மழைக்கும் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. மொத்தம் 47 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடங்கி உள்ளது. ஆனால் இந்த பணி பெரும் சவாலாக உள்ளது. இமயமலையையொட்டி நேபாளத்தின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி நேபாளத்தின் இயற்கை பேரிடர் மேலாண்மை பிரிவின் செய்தி தொடர்பாளர் சாந்தி மகத் கூறுகையில், ‛‛இயற்கை பேரிடரில் மாயமாகி உள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது'' என்றார். மேலும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் சார்பில் நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் நாடு முழுவதும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் அவசர சேவைகளில் பணியாற்றுவோர் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தை எடுத்து கொண்டால் தலைநகர் காத்மாண்ட், பக்மதி, கன்டாகி, லும்பினி, மாதேஷ் உள்ளிட்ட இடங்களில் இன்னும் தீவிரமாக கனமழை பெய்யும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அரசின் செய்தி தொடர்பாளர் ராமேஸ்வர் டங்கல் கூறுகையில், ‛‛வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான கனமழை பெய்துள்ளது. 12 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பாதையில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்'' என்றார்.
இந்த மழை, நிலச்சரிவு காரணமாக பல சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து முடங்கி உள்ளது. நேபாளம் - சீனாவை இணைக்கும் அரணிகோ நெடுஞ்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலையில் விமான சேவைகளும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். உள்நாட்டு விமான சேவைகள் முடங்கி உள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications