கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 5 பேருக்கு கத்திக்குத்து - தாக்குதல் நடத்திய மாணவர் சுட்டுக்கொலை
மெர்சட், கலிபோர்னியா: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்குள் அதிரடியாக நுழைந்து மாணவர் ஒருவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் குத்திய 20 வயது மாணவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்திய நேரப்படி இது நேற்றிரவு ஆகும்.

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 20 வயது மாணவர் கல்லூரியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறைக்குள் அதிரடியாக நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். முதலில் குறிப்பிட்ட மாணவர் ஒருவரை அவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனைப் பார்த்து அருகில் இருந்த மாணவர்களும், பக்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 31 வயது தொழிலாளர் ஒருவரும் முயன்றுள்ளனர். இதனால் அவர்களையும் கத்தியால் அம்மாணவர் குத்தியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்கலைக்கழக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தாக்குதல் நடத்திய மாணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
காயமடைந்தவர்களில் இருவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலும், மேலும் இருவர் வேறு ஒரு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த கட்டுமான ஊழியர் சிகிச்சைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பயிலும் சுமார் 6 ஆயிரம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் விபரங்களையும் போலீசார் வெளியிட மறுத்து விட்டனர்.
காலை 8 மணியளவில் நடந்த இந்த சம்பவங்களால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications