"எனக்கு யாருமே இல்லை.. ஒரு அப்பா, அம்மா கிடைப்பாங்களா" ஏங்கிய சிறுவன்.. விழுந்தடித்து வந்த 5000 பேர்
9 வயது சிறுவனை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மனுக்கள் குவிந்துள்ளன
ஓக்லஹோமா: 9 வயது சிறுவனின் ஏக்கம் இன்று அமெரிக்காவையே கண்ணீர் விட வைத்துள்ளது. அந்த சிறுவன் கேட்டது வேறு ஒன்றுமில்லை.. ஒரு குடும்பம் வேண்டும்.. அம்மா, அப்பா வேண்டும்.. அவ்வளவுதான்.
Recommended Video
அந்த சிறுவனின் பெயர் ஜோர்டன். 9 வயதாகிறது. இவனுக்கு ஒரு சகோதரனும் இருந்தான். இருவரும் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். ஓக்லஹோமாவில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்தனர். இதில் கடந்த ஆண்டு ஜோர்டனின் சகோதரனை ஒரு குடும்பம் தத்தெடுத்துக் கொண்டது. இதனால் தனித்து விடப்பட்டான் ஜோர்டன்.

அப்பா அம்மாவும் இல்லை, துணையாக இருந்த சகோதரனும் போய் விட்டான்.. இதனால் தனிமையில் வாடினான் ஜோர்டன். இந்த நிலையில்தான் அவனது நிலை குறித்து ஒரு உள்ளூர் டிவியில் பேட்டி போடப்பட்டது. அதில் பேசிய ஜோர்டன், "எனக்கு யாருமே இல்லை. எனக்கு ஒரு குடும்பம் வேண்டும். ஒரு அப்பா அம்மா வேண்டும். சும்மா பேசிக் கொண்டிருக்கவாவது அப்பா அம்மா வேண்டும்" என்று ஏக்கத்துடன் கூறியிருந்தான்.
அவ்வளவுதான் இதைப் பார்த்து அமெரிக்காவே சோகத்தில் மூழ்கிப் போய் விட்டது. அமெரிக்க பெண்களின் தாய்மை விழித்து கதறியது. பிறகென்ன ஜோர்டனை தத்தெடுக்க ஆண்களும், பெண்களுமாக விண்ணப்பம் அனுப்ப ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட 5000 பேர் குவிந்து விட்டனர். இதைப் பார்த்த அந்த நகர தத்தெடுப்பு துறையினர் இப்போது ஜோர்டனுக்கேற்ற குடும்பத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
புளோரிடா, நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ், கென்டகி என பல பகுதிகளிலிருந்தும் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளனவாம். அவற்றை அதிகாரிகள் கவனத்துடன் பரிசீலித்து வருகின்றனர்... விரைவில் ஜோர்டன் ஒரு குடும்பத்துடன் இணையப் போகிறான். அவனுக்கான குடும்பம் யார் என்பது இப்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தையின் ஏக்கமும் தீரப் போகிறது.












Click it and Unblock the Notifications