ஈராக்: கைதிகள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல்- 60 பேர் பலி
பாக்தாத்: ஈராக்கில் கைதிகள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அதில் பயணம் செய்த 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் வடக்கு பாக்தாத்தில் கைதிகளை அழைத்துக்கொண்டு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்களும் இருந்தனர். அப்போது சாலையோரமிருந்து அப்பேருந்து மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கைதிகள், போலீஸ்காரர்கள் உள்பட 60 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்தது. அந்தச் சந்திப்பில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதற்கு எதிராக சர்வதேச அளவில் எதிர்ப்பை கூட்டுவது தொடர்பான முயற்சிகள் தொடர்பாக அவர்கள் இருவரும் பேசத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டும் இதே போலத்தான் இந்த தினத்தில்தான் இரண்டு ஈராக் சிறைகள் மீது தாக்குதல் நடந்து அதில் அடைக்கப்பட்டிருந்த 500 கைதிகள் தப்ப வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications