ஆப்கான்: பஞ்சசீர் பகுதிக்காக தீவிர யுத்தம்- 700 தாலிபான்களை கொன்றதாக வடக்கு படைகள் பகீர் அறிவிப்பு!
காபூல்: ஆப்கானிஸ்தானின் பஞ்சசீர் மாகாணத்தைக் கைப்பற்ற தாலிபான்கள் படுதீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் தாலிபான்களை பஞ்சசீர் மாகாணத்துக்குள்ளேயே நுழையவிடாமல் வடக்கு படைகள் உக்கிர பதிலடி கொடுப்பதாகவும் 700 தாலிபான்களை கொன்றுள்ளதாக வடக்கு படை கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டன. இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கை ஆப்கானில் ஓங்கி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்கள் பிடியில் உள்ளன. ஆப்கான் ராணுவத்தினர் யுத்தம் நடத்தாமல் சரணடைந்ததால் தாலிபான்களால் எளிதாக முன்னேற முடிந்தது.

பெண்கள் போராட்டம்
தலைநகர் காபூலை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை முன்வைத்து காபூலில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தாலிபான்கள் ஒடுக்க முயன்றதால் வன்முறை வெடித்தது.

பஞ்சசீர் வடக்கு படை
இதனிடையே தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது வடக்கு படைகள். தாலிபான்களுக்கு முன்னரே ஆயுதம் ஏந்திய வடக்கு படைகள், பஞ்சசீர் மாகாணத்தை தங்களது பிடியில் வைத்துள்ளனர். சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தியவர் அகமது ஷா மசூத். சில ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபான்களால் அகமது ஷா மசூத் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் அகமத் மசூத், வடக்கு படைகளின் தலைவராக இருக்கிறார்.

ஓங்கியதா தாலிபான்கள் கைது?
காபூல் தாலிபான்கள் வசமானது முதலே வடக்கு படைகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வடக்கு படைகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை தாலிபான்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் பஞ்சசீர் மாகாணத்தை கைப்பற்ற தாலிபான்கள் தீவிர யுத்தம் நடத்தி வருகின்றனர். பஞ்சசீர் தங்களது வசமாகிவிட்டது என தாலிபான்கள் அடிக்கடி கூறி வருகின்றனர்.

வடக்கு படை மறுப்பு
ஆனால் வடக்கு படையினரோ, தாலிபான்களை விரட்டி அடித்து வருகிறோம். பஞ்சசீர் மாகாணத்துக்குள் நுழைய முயன்ற தாலிபான்கள் 700 பேரை சுட்டுக் கொன்றுள்ளோம். 600 பேரை பிணையக் கைதிகளாக பிடித்துள்ளோம் என்கின்றனர். பஞ்சசீர் மாகாணத்துக்கான யுத்தம் தொடர்பாக இப்படித்தான் முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே வடக்கு படையினருடன் இணைந்து ஆப்கான் மாஜி துணை அதிபர் ஷாலே, பஞ்சசீர் மாகாணத்தின் நிலைமை மிக மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. மனிதப் பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால் ஐ.நா.சபை பஞ்சசீர் யுத்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை
இன்னொரு பக்கம் உலக நாடுகளுக்கு மதிப்பாளித்து தாலிபான்கள் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள தாலிபான்களின் அரசியல் பிரிவுதான் இத்தகைய பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் தாலிபான்கள் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐ.நா. சபையின் உயர்நிலைக் குழுவும் வரும் 13-ந் தேதி ஆப்கானுக்கான உதவி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications