சீனா: 7,90,000 போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
பீஜிங்: சீனாவில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக தயாரிக்கப் பட்ட சுமார் 7,90,000 போலி அடையாள அட்டைகள் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டறியப் பட்டு, பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
ஒவ்வொரு சீனக் குடிமகனும் தனது வசிப்பிடத்தை காவல்துறையிடம் பதிவு செய்யவேண்டியது அங்கு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு வீடு, கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான சலுகைகளை அவர்கள் பெறமுடியும்.
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட சிலர், போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 7,90,000 போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப் பட்டுள்ளன.
இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டபோது இந்த போலி அட்டைகளின் சாயம் வெளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உடனடியாக போலி அடையாள அட்டைகள் ரத்து செய்யப்பட்டு, இவற்றைப் பயன்படுத்தியவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும், இத்தகைய செயலுக்கு துணை செல்லும் காவல்துறையினரும் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற வருடம் நடைபெற்ற உயர் வழக்கில் கிராமிய வங்கி ஒன்றில் துணைத் தலைவராகப் பணி புரிந்த கோங் அய் அய் என்பவர் இதுபோல் பல போலி அடையாள அட்டைகளை வைத்து 40 விலையுயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை வைத்திருந்த்தாகக் கண்டுபிடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது..
'சிஸ்டர் ஹவுஸ்' என்ற பெயரால் குறிப்பிடப்பட்ட இந்தப் பெண்மணி உத்தியோகபூர்வ ஆவணங்களில் மோசடி செய்ததற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை பெற்றார். இவர் போலி அடையாள அட்டைகளைப் பெற உதவியதற்காக முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக அரசு செய்தி நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications