என் காதலி கூட பேசுவியா: 65 வயது தாத்தாவுடன் மோதிய 80 வயது தாத்தாவுக்கு சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் காதலி விவகராம் தொடர்பாக ஒருவரை கத்தியுடன் துரத்தியதற்காக 80 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு நாள் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் வேலை செய்பவர் லிம் சாங் சாங்(80). அவருக்கு தனது காதலி அவருடைய வீட்டு உரிமையாளரான சியோங் யீ முன்(65) உடன் உறவு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் லிம் வேலை பார்க்கும் தேவாலயத்திற்கு சியோங் வந்தார்.
அப்போது காதலி விவகாரம் தொடர்பாக லிம் மற்றும் சியோங்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லிம் 20 செமீ நீளமுள்ள கத்தியை எடுத்து சியோங் மீது வீசினார். சியோங் தேவாலய தூண் பின்பு ஒளிந்து தப்பித்துக் கொண்டார்.
அப்படியும் ஆத்திரம் தீராத லிம் குடை, பாக்கெட் கத்தி மற்றும் கத்தரிக்கோலை வீசினார். பதிலுக்கு சியோங் தீயணைப்பு சிலிண்டரை தூக்கி லிம் மீது வீசினார். இரண்டு முதியவர்கர்களும் வீசிய பொருட்கள் குறி தப்பியதால் அவர்கள் காயம் இன்றி தப்பித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தேவாலயத்திற்கு வந்து இரண்டு முதியவர்களையும் விலக்கிவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லிம்முக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 656 அபராதமும், ஒரு நாள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.