நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு பயங்கரத்தில் சிக்கிய 9 இந்தியர்கள் மாயம்.. திடுக் தகவல்கள்
Recommended Video
கிறைஸ்ட்ஸ்சர்ச்: நியூசிலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 9 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தாக்குதலில் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதி மற்றும் லின்வுட் மசூதி ஆகியவற்றில், வலதுசாரி தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர், நேற்று, சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் இரு மசூதிகளிலும் மொத்தம் 49 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இரு மசூதிகளிலும் தொழுகைக்காக சென்றிருந்த 9 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்த இந்தியர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகின்றனர். சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்தியர்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியே வருவதில் சிக்கல் உள்ளது என்று தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் இந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த அகமது ஜஹாங்கீர் என்பவர் படுகாயமடைந்துள்ளது மட்டும் உறுதியாகத் தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆன் லைனில் வைரலாக சுற்றி வந்த வீடியோவை பார்த்த, அகமது ஜஹாங்கீரின் சகோதரர் குர்ஷித் இதை உறுதி செய்துள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த குர்ஷித், இந்த வீடியோவை பார்த்ததும் தனது சகோதரர் தொடர்பாக தகவல் அறிந்து கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் சுஷ்மா சுவராஜிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால், அரசியல் கட்சிகளின் உதவியை அவர் நாடியுள்ளார்.
இது குறித்து அளித்த பேட்டியில், எனது சகோதரர் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி கதறுவதை வீடியோவில் எங்கள் கண்களாலேயே பார்த்தோம். எனவே, உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால் எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. வேறு வகையில் கிடைத்த தகவல் படி, ஜஹாங்கீர் நியூசிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்