அமெரிக்காவிற்கு அகதியாக சென்ற வழியில் பரிதாபம்.. பசியில் வாடி இறந்த 7 வயது கவுதமாலா சிறுமி
டெக்சாஸ்: அமெரிக்காவில் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் , செழிப்பான நாடுகளை நோக்கி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், அகதிகளாக தஞ்சமடைய தந்தையுடன் சென்று 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
கவுதமாலாவைச் சேர்ந்த சிறுமி ஜாக்லின் கால் மற்றும் அவரது தந்தை நேரி ஹில்பெர்டோ கால் கஸ் ஆகியோர் கவுதமாலாவில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் வேண்டி சக அகதிகளுடன் நடைபயணம் மேற்கொண்டனர். நீண்ட நாட்களாக அங்கு அகதிகள் சாரை சாரையாக தஞ்சம் வேண்டி நடைபயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விசாரணை
மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் நோக்கி சிறுமி ஜாக்லின் கால் மற்றும் அவரது தந்தை நேரி ஹில்பெர்டோ கால் கஸ் சென்றனர். எல்லையை அடைய 90 நிமிடங்களே இருந்தன. அதற்கு முன் எல்லை ரோந்து போலீசரால் இருவரும் சுற்றிவளைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு மொழி தெரியாததால் பதில் கூற முடியாமல் திணறினர். பின்னர், தந்தையையும், மகளையும் விசாரணை அழைத்துச் சென்றனர்.

உணவு இல்லை
பசி மயக்கத்தில் இருந்த சிறுமி ஜாக்லின் காலை விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, அங்கு உணவு எதுவும் தராமல் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருந்த சிறுமி, திடீரென உயிரிழந்தார்.

குடும்பம் கதறல்
விசாரணைக்காக சிறுமி ஜான்லின் கால் அழைத்துவரப்பட்ட போது, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக சிறுமியின் தந்தை கையெழுத்திட்டு இருந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை போலீசார் காட்டினர். இருப்பினும் சிறுமியின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

குடும்பம் கண்ணீர்
குடும்ப வறுமை காரணமாக ஏஜென்ட் மூலம் டெக்சாஸ் சென்றதாக சிறுமியின் தந்தை தெரிவித்தார். ஆனால், உணவு எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதே நேரம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும், உணவு கிடைக்கவில்லை ஏற்கனவே இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த எங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மொழி புரியாததால் போலீசார் கையெழுத்து போட சொன்ன இடத்தில் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்.

உடல் ஒப்படைப்பு
சிறுமியின் உயிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவுதமாலா துணை தூரக அதிகாரிகள், உடலை சொந்த நாட்டிற்கு எடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தனர்.தஞ்சமடைய தந்தையுடன் சென்ற சிறுமி பசி கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சிறுமியை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications