சீனாவில் புகழ் பெற்ற தீம் பார்க்கில் பயங்கர தீ விபத்து.. 13 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவில் புகழ் பெற்ற தீம்பார்க் சுற்றுலா தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் விடுமுறை நாட்களில் பல லட்சம் மக்கள் சீனாவில் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீனாவில் நேற்று தொடங்கி எட்டு நாள்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு நடுவே மக்கள் ஆர்வமுடன் அங்குள்ள சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் நகரின் புறநகரில் உள்ள டைட்டாய்சன் தீம் பூங்கா அருங்காட்சியகங்கள், படகு சவாரிகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட மிகப்பெரிய பூங்காவாகும். இந்த பூங்காவிற்கு மக்கள் அதிக அளவில் நேற்று குவிந்தனர். மக்கள் மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், பனி விளக்கு மற்றும் பனி சிற்பங்களின் கண்காட்சி மண்டபத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும் 15 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல் நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்து தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. சீனாவின் தேசிய அளவிலான அமைப்பான மாநில கவுன்சிலின் பணி பாதுகாப்புக் குழு நடதும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.