45 வயது பெண்ணை உயிருடன் விழுங்கிய அனகோண்டா! வயிற்றை கிழத்து உடலை மீட்ட சோகம்! இந்தோனேசியாவில் ஷாக்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 45 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பொதுவாக மலைப்பாம்புகள் மனிதர்களை உயிருடன் விழுங்கும் சம்பவங்களை சினிமாவில்தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தோனேசியாவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 2017, 2018 மற்றும் 2023 என தொடர்ச்சியாக மலை பாம்புகளுக்கு மனிதர்கள் உயிரிழக்கும் சோகம் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகதான் தற்போது மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.

தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலேம்பாங் கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார் ஃபரிதா எனும் இந்த பெண் தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில் கடந்த 6ம் தேதி அவரை காணவில்லை. எனவே அவரது கணவரும், கிராமத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஒரு நாள் முழுவதும் எங்கு தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேடுதல் முயற்சியை கைவிடாத கணவர், கிராம மக்களின் உதவியுடன் காட்டுக்குள் தேடியிருக்கிறார். அங்கு அவரது மனைவி பயன்படுத்தும் விவசாய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உடனே அந்த பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போதுதான் அங்கு 16 மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பாம்பின் உடலை கிழித்து பார்க்கையில் ஃபரிதாவின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது இந்தோனேசியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
"பெண்ணை விழுங்கிய பாம்பு ரெட்டிகுலேட்டட் வகையை சார்ந்தது. இது உலகின் மிக நீளமான பாம்புகளில் ஒன்று. இந்த வகை பாம்புகளுக்கு விஷம் கிடையாது. எனவே பெரிய இரையை சாப்பிட, அதை நெறித்து கொல்லும். மனிதர்களை கொல்வது அபூர்வம்தான். ஏனெனில் மனிதர்களின் எடையும், அளவும் பாம்புக்கு மிக அதிகம். இருப்பினும், சாத்தியம் இருந்தால் மனிதர்களை சாப்பிட இந்த பாம்புகள் தயங்குவதில்லை. 75 கிலோ வரை இருக்கும் இந்த பாம்புகள் அதிகபட்சமாக 29 ஆண்டுகள் வரை உயிருடன் வாழும்.
ஃபரிதா எனும் பெண்ணை பாம்பு விழுங்கிவிட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். பாம்பு நகர முடியாமல் ஒரே இடத்தில் இருந்தது. எதையோ மிக அதிக எடைகொண்ட உயிரினத்தை விழுங்கி இருப்பதை நாங்கள் பார்த்த உடன் கண்டுபிடித்து விட்டோம். இருப்பினும், அது ஃபரிதாவைதான் விழுங்கியதா என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனவே அதன் உடலை வெட்டினோம். உள்ளே ஃபரிதாவின் சடலம் இருந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications