இந்தோனேஷியாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. கடலில் எழுந்த பேரலைகள்.. பீதியில் உறைந்த மக்கள்!
இந்தோனேஷியாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலில் 2 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜாவா: இந்தோனேஷியாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலில் 2 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்தோனேஷியாவை அவ்வபோது இயற்கை சீற்றங்கள் ஆட்கொள்வது ஒன்றும் புதிதல்ல. தற்போது அங்குள்ள பாலி தீவில் உறுமி வரும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சுற்றுவட்டார மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா தீவில் நேற்று இரவு 11.47 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குலுங்கிய வீடுகள்
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன.
வீதிகளில் கழித்த மக்கள்
இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இரவு முழுவதையும் அவர்கள் வீதிகளிலேயே கழித்தனர்.
நிலநடுக்கம் - 2 பேர் பலி
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 62 வயது முதியவர் ஒருவரும் 80 வயது மூதாட்டி ஒருவரும் உயிரிழந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை.
சுனாமி எச்சரிக்கை
கடலுக்கடியில் சுமார் 91 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கடலில் எழுந்த பேரலைகள்
கடலில் சுமார் 2அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
திரும்பபெறப்பட்ட எச்சரிக்கை
இந்த நிலநடுக்கம் சுமார் 30 நொடிகள் உணரப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
தற்காலிக குடில்களில் தங்கலாம்
கடலோரப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள். இருப்பினும் தங்கள் வீடுகள் பாதுகாப்பாக இல்லையென்றால் தற்காலிக குடில்களில் தங்கி கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிலநடுக்கம், சுனாமி
கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி சுமத்ரா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் பலியானது நினைவிருக்கலாம். அதற்கு முன்னதாக கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்பட்டு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.