உபேரின் மிச்ச மீதி நல்ல பெயரையும் மொத்தமாக கெடுத்த டிரைவர்
மிஷிகன்: அமெரிக்காவில் உபேர் டாக்சி டிரைவர் ஒருவர் 8 பேரை துப்பாக்கியால் சுட்டார். அதில் 6 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள காலமாசுவை சேர்ந்தவர் ஜேசன் பிரையன் டால்டன்(45). உபேர் டாக்சி டிரைவர். அவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.42 மணிக்கு தனது குழந்தைகளுடன் வீட்டு பார்க்கிங் பகுதியில் நின்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நான்கு மணிநேரம் கழித்து டால்டன் ஒரு கார் கடையில் நின்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகனை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு உணவகம் பக்கம் சென்ற அவர் பார்க்கிங் பகுதியை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 4 பெண்கள் பலியாகினர், மேலும் 14 வயது சிறுமி காயம் அடைந்தார்.
இந்த சம்பவங்களில் இரண்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் டால்டனை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் யார் கேட்ட கேள்விக்கும் பதில் அளிக்காமல் மவுனமாகவே இருந்தார்.
கொலை செய்யப்பட்டவர்களுக்கும், டால்டனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டால்டன் மீது இதுவரை எந்த புகாரும் வந்தது இல்லை. இந்நிலையில் அவர் எதற்காக 6 பேரை கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
அவர் கொலை செய்ததற்கு இடையே சில பயணிகளை வேறு தனது டாக்சியில் ஏற்றி அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் விட்டுள்ளார். அதில் ஒரு பயணி டாக்சியில் ஏறி டால்டனிடம் கூறியது தான் வேடிக்கையான விஷயம்.
யாரோ ஒருவர் துப்பாக்கியால் பலரை கொலை செய்வதை அறிந்த டெரக் என்பவர் நடந்து செல்ல பயந்து கொண்டு டால்டனின் டாக்சியில் ஏறினார். ஏறியவர் டால்டனிடம் யாரோ ஒருவர் துப்பாக்கியால் மக்களை கொலை செய்வதால் நடந்து செல்ல பயந்து கொண்டு டாக்சியில் ஏறினேன். அந்த கொலையாளி நீங்கள் இல்லையல்லவா என்று கேட்டுள்ளார். அதற்கு டால்டன் இல்லை நான் கொலையாளி இல்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலகின் பல்வேறு நாடுகளில் உபேர் நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போயுள்ள நிலையில் இந்த கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications