"கிரேன் மூலம் தூக்கி செல்லப்பட்ட கொரோனா நோயாளி".. பரவும் ஷாக் வீடியோ! சீனாவில் நடக்கும் கொடுமை!
பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபரை கிரேன் மூலம் தூக்கி செல்கின்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை எல்லாம் உலுக்கி கடும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்திய கொரோனா முதன் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் உள்ள மார்க்கெட் ஒன்றில் இருந்து முதன் முதலாக இந்த வைரஸ் பரவியாதாக கூறப்படுகிறது.
2019ல் என்ஐஏ விசாரித்த முபினை கண்காணிக்க தமிழக உளவுத் துறை தவறியதா?- செந்தில் பாலாஜி விளக்கம்
கொரோனா வைரஸ்
இதற்கு முன்பு வந்த வைரஸ் பரவலை விட அதிக வீரியம் கொண்டதாகவும் அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும் இருந்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இந்தியாவிலும் கடும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்திவிட்டது. உயிரிழப்பு மட்டும் அல்ல.. கடும் பொருளாதார நெருக்கடியை கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்தி விட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவையே தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கும் முன்பாக முக்கிய கேடயமாக கடைபிடிக்கப்பட்டன.
ஆட்டம் காட்டிய கொரோனா
இதனால், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஒரு இடத்தில் இருந்து ஒரு இடத்திற்கு மக்கள் அத்தியாவசியம் இன்றி பயணிக்கக் கூட தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதால் உலகம் முழுவதும் இயல்பு நிலைக்கு ஏறத்தாழ திரும்பி விட்டது. வல்லரசு நாடான அமெரிக்கவைக் கூட இந்த கொரோனா வைரஸ் அசைத்து பார்த்துவிட்டது.
மொத்த பாதிப்பே 2.58 லட்சம் தான்
ஆனால், கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில் இந்த வைரஸ் தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இந்த வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது பெரும் வியப்பாக பிற நாடுகளால் பார்க்கப்பட்டன. ஏனென்றால், சீனாவில் இன்றைய நிலவரப்படி மொத்த கொரோனா பாதிப்பே 2.58 லட்சம் தான் என்று வோர்ல்டோமீட்டர்ஸ் தரவுகள் கூறுகின்றன. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஒரு நாள் பாதிப்பு கூட இதை விட அதிகமாக பல நாட்கள் பதிவாகி இருந்தது.
தீவிர கட்டுப்பாடுகள்
கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரத்தை சீனா மறைப்பதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படாமலும் இல்லை. எனினும், கொரோனாவைக் கட்டுப்படுத்த ஜீரோ கோவிட் பாலிசி என்ற திட்டத்தை அமல்படுத்திய சீனா கொரோனா கட்டுப்பாடுகளை மிகக் கடுமையாக பின்பற்றியது. நகரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டு மொத்த நகர மக்களுக்கும் மாஸ் கொரோனா பரிசோதனை, தீவிர கட்டுப்பாடுகள் என பல்வேறு கெடுபிடிகளை விதித்தது.
ஜீரோ கோவிட் பாலிசி
திறந்த வெளி சிறை என்று சொல்லும் அளவுக்கு கட்டுப்பாடுகளை சீனா கடுமையாக அமல்படுத்தியது. தனிநபர் இடைவெளியை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படி கடுமையான கட்டுப்பாடுகளுக்கு சீனாவில் ஒருபுறம் எதிர்ப்புகள் எழாமலும் இல்லை. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத சீனா, கொரோனாவுக்கு எதிராக ஜிரோ கோவிட் பாலிசியை தீவிரமாக இப்போதும் பின்பற்றி வருவதாக சொல்லப்படுகிறது.
கிரேன் மூலம் தூக்கிச்செல்லும் வீடியோ
இந்த நிலையில், கொரோனா பாதித்த நபர் ஒருவரை கிரேன் மூலமாக தூக்கி வேறு இடத்தில் வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி விட்டு இருக்கிறது. கொரோனா பாதித்த நபரை தொடுவதால் தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்பதால் இப்படி கிரேன் மூலமாக தூக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.