வினோத குழந்தையை கருவில் சுமக்கும் தாய்…. மருத்துவர்களை வென்ற தாய்பாசம்
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில், இரண்டு மூளை, இரண்டு முகம் மற்றும் ஒரே உடலை கொண்ட குழந்தையை கண்டிப்பாக பெற்றெடுக்கப்போவதாக அதன் பெற்றோர் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரீனி யங் சிம்மன் ஹோவி தம்பதியர், ஏற்கனவே ஏழு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரீனி மீண்டும் கருவுற்றுள்ளார். 19 வார கர்ப்பிணியான ரீனியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது.

இரு முக குழந்தை:
ரீனியின் கருவில் வளரும் குழந்தை இரண்டு தலைகளையும், ஒரே உடலையும் பெற்று வளர்ந்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற குழந்தைகள் பிறந்துள்ள போதும் ரீனியின் கருவில் வளரும் குழந்தைக்கு இரு முகங்கள் முழுமையாக உள்ளன.

சிக்கலான மூளை அமைப்பு:
அதில் நான்கு கண்கள், இரு மூக்குகள், இரு வாய்கள் ஆகிய அனைத்தும் முழுமையாக இடம் பெற்றுள்ளன. தவிர, இரண்டு தனித் தனி மூளைகள் வளர்ந்து வருகின்றன. அவை, ஒரே கபால இணைப்பில் வளர்வதால் சிக்கல் அதிகரித்துள்ளது. இக்குழந்தை உயிருடன் பிறந்தாலும், நிச்சயம் அதிக நாட்கள் வாழாது என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

கருச்சிதைவு செய்ய மாட்டோம்:
குழந்தை பிறந்து சிரமப்படுவதற்கு பதில் அதை கருச்சிதைவு செய்துவிடுமாறு டாக்டர்கள் ரீனிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். எனினும் டாக்டர்களின் அறிவுரையை ஏற்கப்போவதில்லை என்றும், தங்கள் குழந்தையை நிச்சயம் பெற்றெடுக்கப் போவதாகவும் ரீனி சிம்மன் தம்பதி தெரிவித்துள்ளனர்.

நல்ல வளர்ச்சி:
இதுகுறித்து டாக்டர்கள் ,"ரீனி ஏற்கனவே, ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தவர். அவரின் கருவில் வளரும் இக்குழந்தை மிகவும் அதிசயமானது. தற்போது, 19 வார கருவாக இருக்கும் இந்த குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக உள்ளது. இரு மூளைகளும் நன்கு செயல்படுகின்றன. இரு முகங்களும் தெளிவாகவும், தகுந்த வளர்ச்சியுடனும் காணப்படுகின்றன.

மொத்தமே 35 குழந்தைகள்தான்:
உலகம் முழுவதும் இதுவரை இம்மாதிரியான 35 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. அவை எதுவும் உயிருடன் இல்லை. எனவே, குழந்தை பிறந்து சிரமப்படுவதற்கு பதிலாக, அதை கலைத்துவிடுமாறு அறிவுறுத்தினோம். ஆனால் இந்த தம்பதி எங்கள் அறிவுரையை ஏற்க மறுத்துவிட்டனர். கூடிய வரை அக்குழந்தை நல்ல முறையில் பிறக்க நாங்கள் முயற்சிப்போம்"என்று தெரிவித்தனர்.

பாசப் பிணைப்பு:
"எங்கள் ஏழு பிள்ளைகளும், கருவில் வளரும் அதிசய குழந்தையை நேசிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப நாங்கள் இக்குழந்தையை பெற்றெடுக்க விரும்புகிறோம். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க பாடுபடுவோம்"என, ரீனி சிம்மன் தம்பதி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications