பாகிஸ்தானில் 10 வருடங்களில் கருக்கலைப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பு!
இஸ்லாமாபாத்: செக்ஸ் பற்றி கூட டிவியில் பேச அனுமதிக்காத, கட்டுப்பாடுகள் நிறைந்த பாகிஸ்தானில் கருக்கலைப்பு அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் கருக்கலைப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரம் பாகிஸ்தானை அதிர செய்துள்ளது.
மக்கள்தொகை கவுன்சில், குட்மாசெர் இன்ஸ்ட்டிடியூட்டுடன் இணைந்து நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்கள்:
2012ம் ஆண்டில், 15 வயதில் இருந்து 49 வயதுக்குட்பட்ட பெண்களில் ஆயிரத்துக்கு 50பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். 2002ல் இது 27 ஆகதான் இருந்தது. ஒட்டுமொத்த கருக்கலைப்பு எண்ணிக்கை 2012ல், 2.25 மில்லியனாக இருந்துள்ளது. பாகிஸ்தானில் கருக்கலைப்பு செய்ய சட்டத்தில் இடமில்லை என்றபோதிலும், ரகசியமாக இத்தனை கருக்கலைப்புகள் நடந்துள்ளன.
இதில் பெரும்பாலான கருக்கலைப்புகள், படிப்பு தகுதியில்லாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காலம் காலமாக செய்யப்பட்டுவரும் நடைமுறையில் இந்த கருக்கலைப்புகள் இருந்துள்ளன. இதுபோன்ற கருக்கலைப்புகளால் 6 லட்சத்து 23 ஆயிரம் பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த ஆய்வின்போது பல்வேறு மருத்துவமனைகள் மற்றும், கருக்கலைப்பு செய்யும், 44 பெண்களிடம் நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூகுள் வெளியிட்ட அறிக்கையில், செக்ஸ் தொடர்பாக இணையத்தில் அதிகம் தேடிய நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறியிருந்தது நினைவிருக்கலாம்.