குமுறும் எரிமலை... கொதிக்கும் லாவா... சாகசவீரரின் துணிச்சல் செல்பி
வனுவாட்டு: எரிமலை என்ற பெயரைக் கேட்டாலே நம்மில் சிலருக்கு பயம் ஏற்படும்... பல நூறு மைல்களுக்கு அப்பால் பாதுகாப்பாக போய்விடுவோம். எரிமலை வெடித்துச் சிதறுவதை டிவியில் பார்த்து அச்சத்துடன் ரசிப்பதோடு சரி.
ஆனால் கனடா நாட்டைச் சேர்ந்த சாகச செயல்வீரரான ஜார்ஜ் கௌரூனுஸ் கொதிக்கும் எரிமலையின் அருகில் நின்று செல்பி ஒன்றை எடுத்துள்ளார்.
'ஆங்கிரி பிளானெட்' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் ஜார்ஜ் கௌரூனுஸ். இவர் தனது தொடருக்காக சமீபத்தில் ஒரு துணிகர செயலில் ஈடுபட்டார்.
செல்பி சாகசம்
தெற்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான வனுவாட்டுவில் அமைந்துள்ள ஆம்பிரிம் என்ற எரிமலையின் வாய்ப்பகுதியினுள் சமீபத்தில் இறங்கிய ஜார்ஜ் கௌரூனுஸ் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
கொதிக்கும் லாவா
அப்போது கீழே 1200 அடி மட்டத்தில் லாவா குழம்பானது கொதித்துக் கொண்டிருந்துள்ளது. சென்ற வாரம் ஐஸ்லாந்து, பப்புவா நியு கினியா போன்ற நாடுகளில் பல எரிமலைகள் வெடித்துச் சிதறின. மக்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்லாமல் இருக்க முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டிருந்தது.
எரிமலையின் குமுறல்
நல்லவேளையாக இவர் இறங்கிய சமயம் அந்த எரிமலை வெடிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவித்தன.
உருகிய கேமரா
எரிமலை வாயின் உட்புறத்தையும், தன்னையும் படம் எடுக்க உதவிய அந்த கேமரா வெப்பத்தில் இறுதியில் உருகிவிட்டது என்று கெளரூனுஸ் டிவிட்டரில் கூறியுள்ளார்.
அமில மழையில்
அதேபோல் அந்த வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர் அணிந்திருந்த உடையானது எரிமலையிலிருந்து வெளியான அமில மழையில் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்றும் அவர் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.