ஆப்கானிஸ்தான்: "பறவைகள் தற்கொலைப் படை"யை ஏவும் தலிபான்கள்!!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய போர் வியூகமாக மிகப் பெரிய பறவைகளை தற்கொலைப் படைகளாக அனுப்பி தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் விரைவில் அந்நாட்டை விட்டு வெளியேற உள்ளன. இந்த நிலையில் அண்மைக்காலமாக தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் படைகள் மீது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆப்கானின் வடக்குப் பகுதியில் பார்யப் என்ற பகுதியில் பெரிய பறவை ஒன்று பறந்து சென்றது. ஆனால் அந்தப் பறவை வெளிநாட்டுப் பறவையாக இருந்ததால் சந்தேகம் அடைந்த பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டனர்.
அப்போது படுகாயத்துடன் விழுந்த பறவையை சோதித்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் அதன் தலையில் ஜிபிஎஸ் கருவி, சிறிய ரக கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.
மேலும் அந்த பறவையின் இறகுகளில் வெடிகுண்டும் கட்டப்பட்டிருந்தது. தலிபான் தீவிரவாதிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுடன் உள்ள பறவையை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் போலீஸ் மூத்த அதிகாரி அகமதுல்லா கூறியபோது, தலிபான் தீவிரவாதிகள் இதற்கு முன்பு கழுதைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தினர். தற்போது முதல்முறையாக பறவை மூலம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
இதேபோல் ஏராளமான பறவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு புதிய தற்கொலைப் படையை உருவாக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications