"பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்.." அலறவிட்ட ஆப்கானிஸ்தான்.. அச்சத்தில் ஷெபாஸ் அரசு!
காபூல்: ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே இப்போது மோதல் நிலவி வருகிறது. இது தொடர்பாக நடந்த அமைதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி கடுமையாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் தனது தவறுக்கு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்த அவர், இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானே இருக்காது என்றும் சாடினார்.
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கி வந்தனர். இதனால் போர் வெடிக்கும் சூழல் உருவானது. நடுவில் துருக்கி உள்ளிட்ட நாடுகள் வந்து மத்தியஸ்தம் செய்ததில் நிலைமை மோசமாக மாறாமல் இருந்தது. இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தைகளும் வெற்றியடையவில்லை.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான்
டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவளிப்பதாகவும் டிடிபி தங்கள் நாட்டின் மீது எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. டிடிபியை ஒழிக்காத வரை அமைதி திரும்பாது என்று பாகிஸ்தான் கூறுகிறது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ஆப்கானிஸ்தான், டிடிபி என்பது பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என கூறுகிறது. இது தொடர்பாக ஆப்கான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
பெரிய விலை கொடுக்கணும்
ஆப்கானிஸ்தானில் தீயணைப்பு இயக்குநரகத்தின் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பேசிய அவர், "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உள்நாட்டுப் பிரச்சனைகள் இருக்கலாம்.. ஆனால் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.. நீங்கள் உங்கள் (பாகிஸ்தான்) பிரச்சனைகளை ஆப்கானிஸ்தானுக்குள் கொண்டு வந்து இங்கு குழப்பத்தை உருவாக்கினால்.. இந்த தவறுக்கு நீங்கள் பெரும் விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும்.
எங்களிடம் நீண்ட தூர ஏவுகணைகளோ அல்லது சக்திவாய்ந்த ஆயுதங்களோ இல்லை.. ஆனால் எங்கள் உறுதிப்பாடும், மன உறுதியும் வலுவாக உள்ளது. எங்கள் பொறுமை மீண்டும் சோதிக்க வேண்டும்.. பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்" என்றார்.
பாகிஸ்தானே இருக்காது
பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சனைகளை மறைமுகமாக விமர்சித்த ஹக்கானி, "உள்நாட்டில் பிரச்சனைகளை இருந்தால் அதை உங்கள் நாட்டிலேயே தீர்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் பல முறை இது தொடர்பாகக் கூறிவிட்டோம். ஆனால், அதை எங்கள் நாட்டில் கொண்டு வந்து பிரச்சனை செய்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தாய்நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற நாடுகளிடம் அந்தப் பிரச்சினையைக் கொண்டு வரக்கூடாது" என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து எந்தவொரு பிரச்சனையும் யாருக்கும் வராது.. அதேநேரம் எங்களை யாராவது சீண்டினால் சும்மா இருக்க மாட்டோம்.. தேவையான பதிலடிகளைக் கொடுப்போம்.. இந்தப் பிரச்சனைகளை எங்கள் ஸ்டைலில் அணுகினால்.. பாகிஸ்தான் அதே பாகிஸ்தானாக இருக்காது! ஆப்கானிஸ்தானும் எப்போதும் அமைதியாகவே இருக்கும் எனச் சொல்ல முடியாது" என்று அவர் எச்சரித்தார்.
காட்டம்
ஹக்கானி ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பில் மிக முக்கியமான ஒரு தலைவராக இருக்கிறார். அவர் நேரடியாக பாகிஸ்தானை எச்சரித்துள்ளது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. 2021ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தானை ஒரு மூத்த தாலிபான் தலைவர் இவ்வளவு கடுமையாக விமர்சிப்பது இதுவே முதன்முறை. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகி வருவதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications