உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை... பெண்களுக்கான புதிய கட்டுப்பாடு... ஆப்கன் அரசு பரபர உத்தரவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்களுக்கு புதிதாக கட்டுப்பாடு ஒன்றை தாலிபான் அரசு விதித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
2021 ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

பெண்களுக்கான கட்டுப்பாடுகள்
குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்கக அங்கு தடை உள்ளது. மேலும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இதுதவிர 7ம் வகுப்பு வரை மட்டும் மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. திறக்கப்பட்ட வகுப்புகளிலும் மாணவ-மாணவிகள் தனித்தனியே பாடம் கற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

லைசென்ஸ்சுக்கு தடை
இதனால் ஆப்கனில் உள்ள பெண்களுக்கு கல்வியறிவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு கூட பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் வாகனங்களில் வெளியே சென்று வர முடியாது. இதன்மூலம் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கும் செயல் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
இந்நிலையில் தான் இன்று தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொதுவெளியில் வரும் பெண்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்காவை அணிய கட்டாயமாக்கி உள்ளது. மேலும் நீல நிறத்திலான புர்கா தான் முகத்தை முழுவதுமாக மூடும் எனவும் தாலிபான்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். அப்போதும் இதுபோன்ற கடும் கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டது. தற்போதும் அது பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் தொடரும் எதிர்ப்பு
ஆப்கானிஸ்தானில் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது தாலிபான்கள் அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். செயல்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications