ஆப்கான் பகீர்... விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை படுகொலை செய்ய விவரங்களை சேகரிக்கும் தாலிபான்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாலியல் பெண் தொழிலாளர்களை படுகொலை செய்ய தாலிபான்கள் விவரங்களை சேகரிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியன. இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் தாலிபான்கள் வசமாகிவிட்டன.
கடந்த 1996-2001 ஆட்சிக் காலத்தை போல அல்லாமல் தற்போது உலக நாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் தாலிபான்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் பஞ்சசீர் மாகாணத்தையும் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஞ்சசீர் மாகாணத்தை கைப்பற்றிவிட்டதாக தாலிபான்கள் அறிவித்தாலும் வடக்கு படைகள் அதை மறுத்துள்ளன.

தோஹா பேச்சுவார்த்தை
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தாலிபான்களின் அரசியல் பிரிவு இயங்கும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இத்தகைய பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போராடும் பெண்கள்
இன்னொரு பக்கம் தாலிபான்கள் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. ஹெராத் நகரில் இந்த கோரிக்கையை முன்வைத்து பெண்கள் போராட்டத்தை நடத்தினர். பின்னர் தலைநகர் காபூலிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் போராட்டங்கள் நடத்தினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் தரன்னோம் சயீதி, பெண்களின் பங்களிப்பு இல்லாத எந்த சமூகமும் முன்னேறாது என சாடியிருந்தார்.

வடக்கு படைகள் ஆதரவு
தாலிபான்களுக்கு எதிரான பெண்களின் போராட்டம் உலகநாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் பெண்களின் உரிமை போராட்டங்களை ஆதரிப்பதாக பஞ்சசீர் மாகாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வடக்கு படைகளின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகமது மசூத் கூறுகையில், ஹெராத்திலும் காபூலிலும் போராடும் சகோதரிகளின் உரிமை போராட்டத்தை மதிக்கிறோம். அவர்களது சட்டப்பூர்வமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டோர் விவரங்கள்
இந்த நிலையில்தான் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் குறித்த விவரங்களை தாலிபான்கள் சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாலிபான்களைப் பொறுத்தவரை இஸ்லாமிய ஷரியா சட்டப்படியான ஆட்சி நடைபெறும் என அறிவித்திருந்தனர். ஷரியா சட்டப்படி இயற்கைக்கு மாறான உறவு வைத்தால் கல்லால் அடித்து கொலை செய்வது உள்ளிட்ட தண்டனைகள் நிறைவேற்றப்படும். தற்போது விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் விவரங்களை தாலிபான்கள் சேகரித்து வருவதாகவும் அவர்கள் படுகொலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பாலியல் பெண் தொழிலாளர்களுக்கு தாலிபான்கள் எத்தகைய மரண தண்டனையை கொடுப்பார்களோ என்கிற அச்சமும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications