காலரா, டைபாய்டைப் பரப்பி வரும் ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரி!
கேப்டவுன்: ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய குடிநீர் ஆதாரமான விக்டோரியா ஏரி, காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் முக்கிய காரணியாக திகழ்வதாக அதிர்ச்சித் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் நோய் தொற்றும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது விக்டோரியா ஏரி. இந்த ஏரியிலிருந்து நேரடியாக லட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பெற்று வருகின்றனர்.
மனிதக் கழிவுகள் கொட்டப்படுவதால், சமீபகாலமாக இந்த ஏரி அதிகளவில் மாசு அடைந்து வருகிறது. இதனால் நோய்த் தொற்று அபாயத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
நோய்த்தொற்று அபாயம்...
இந்த ஏரி நீரை கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சேனியா, உகாண்டா, கென்யா உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. இதனால், இந்நாட்டு மக்களும் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.
மனிதக் கழிவுகள்...
இது குறித்து தான்சேனியாவின் ஆரோக்கியப் பேரிடர் மற்றும் அவசரகாலத்துறை இயக்குநர் எலியஸ் கூறுகையில், ‘இந்த ஏரியானது மனிதக் கழிவுகளால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சிறிய மற்றும் பெரிய நகரங்கள் பலவற்றில் இருந்து கழிவு நீர் நேரடியாக இந்த ஏரியில் கலப்பதால், அங்குள்ள நீர் மூலம் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
காய்ச்சி குடியுங்கள்...
ஆனபோதும், தொடர்ந்து அந்த ஏரியில் இருந்து பெறப்படும் நீரை மக்கள் நேரடியாக குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க, நீரைக் காய்ச்சி குடியுங்கள் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றன.
குளோரின் அளவு...
அதுமட்டுமின்றி, அந்த ஏரியில் குளோரினின் அளவை லிட்டருக்கு 0.8 மில்லி கிராம் என்ற அளவில் அதிகப்படுத்தவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் நோய்த் தாக்குதலை சிறிதளவு தவிர்க்க முடியும் என்பது அவர்களது கருத்து.
கூவம்...
சுருக்கமாகச் சொல்வதென்றால் சென்னையில் கூவம் நதியின் நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது, ஆப்பிரிக்காவின் விக்டோரியா ஏரி.