காசாவை விட்டு விரட்டப்படும் மக்கள்.. டிரம்ப் சொன்னபடி பிளானை கையில் எடுத்த இஸ்ரேல்.. அதிரடி உத்தரவு
ஜெருசலேம்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதை தொடர்ந்து போர் நிறுத்தம் அமலில் உள்ள காசாவில் இருந்து அங்கு வசிக்கும் மக்களை வெளிநாடுகளுக்கு இடம்பெயர வைக்க தேவையான நடவடிக்கைகள் இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவுக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. இது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போராக வெடித்தது. இந்த போர் கடந்த 15 மாதங்களாக நடந்து வந்தது. காசாவில் செயல்படும் ஹமாஸ் பயங்கரவாதிகள் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து கடந்த மாதம் முதல் போர் நிறுத்தம் என்பது அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் காசாவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக கடந்த மாதம் 20ம் தேதி பதவியேற்றார்.
அதன்பிறகு முதல் முதலாக அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா அழைத்து சந்தித்தார். அமெரிக்காவில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அவர்கள் 2 பேரும் சந்தித்து பேசினர். அப்போது இருநாடுகள் இடையேயான விவகாரங்கள், மத்திய கிழக்கு பிராந்திய சூழல் பற்றி விவாதித்தனர். அதன்பிறகு இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
காசா மொத்தத்தில் முடிந்து போய்விட்டது. நரகத்தின் படுகுழியில் பாலஸ்தீன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் அதே காசாவில் வசிக்க சொல்வது சரியல்ல. 100 ஆண்டாக நடக்கும் அதே சண்டை மீண்டும் நடக்கும். மக்கள் கொத்து கொத்தாக இறப்பார்கள். மீண்டும் வாழ்க்கையை துவங்குவார்கள். பிறகு பரிதாபமாக இறப்பார்கள். எனவே நான் மாற்றி யோசிக்க வேண்டும். காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போகிறது. அது இனி அமெரிக்காவுக்கு தான் சொந்தம்.
அங்கு நாங்கள் வேலை செய்யப்போகிறோம். போர் பூமியில் குவிந்து கிடக்கும் குண்டுகள், வெடிமருந்துகள் உட்பட எல்லாவிதமான ஆயுதங்களையும் அப்புறப்படுத்துவோம். போரில் இடிந்து குவிந்து கிடக்கும் கட்டுமானங்களை அகற்றி காசாவை சமப்படுத்துவோம். வீட்டு வசதியை பெரிய அளவில் உருவாக்குவோம். காசாவில் பொருளாதார ரீதியான வளர்ச்சியை கொண்டு வருவோம்.
பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். அதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவை காலி செய்ய வேண்டும். அவர்களை பக்கத்து நாடுகள் கனிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும். காசாவில் இருந்து மக்கள் முற்றிலும் வெளியேறிய பிறகு எங்கள் வேலையை நாங்கள் ஆரம்பிப்போம்.
பின்னர் காசா ஒரு சர்வதேச நகரமாக விளங்கும். அனைத்து நாட்டு மக்களும் அங்கு வாழ முடியும். பாலஸ்தீனியர்களும் அதில் இருக்கலாம். மத்திய கிழக்கின் அற்புதமான இடமாக காசா முனை மாறி விடும்'' என்றார். இதனை பெஞ்சமின் நெதன்யாகுவும் வரவேற்றார். ‛'உண்மையிலேயே டிரம்ப் எடுத்திருப்பது அற்புதமான முடிவு. மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் கூட. எல்லா பிரச்னைக்கும் தீர்வு தரும் நல்ல ஐடியா'' என்றார்.
டொனால்ட் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு ஈரான் உள்பட பல வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் அதிருப்தியில் உள்ளன. காசா மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற அமெரிக்கா முயற்சி செய்கிறது.அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்த முடிவு என்பது இஸ்ரேலுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளது. இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் கூறியது போல் காசாவில் இருந்து காசா மக்களை வெளியேற்றும் பணியை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபற்றி இஸ்ரேல் நாட்டின் சேனல் 12 என்ற செய்தி நிறுவனம் செய்தி வெளிிட்டுள்ளது. அதன்படி, ‛‛டொனால்ட் டிரம்பின் தைரியமான பிளானை நான் வரவேற்கிறேன். காசாவில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். அவர்களை பிற நாட்டினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் காசா மக்கள் அமைதியான வாழ்க்கையை பெறுவார்கள். ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே உள்ப பிற நாடுகள் அவர்கள் வாழ ஏற்றதாக இருக்கும். இந்த நாடுகள் இஸ்ரேல் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இந்த நாடுகள் காசா மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பாசாங்குத்தனம் அம்பலமாகும். அதேபோல் கனடாவும் இதற்கு முன்பே காசா மக்களை ஏற்க முன்வந்துள்ளது'' என்று கூறியுள்ளார். மேலும் காசாவில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பிற நாடுகளுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications