ஆஹா சீன் மாறுதே.. முதலில் ரஷ்யா.. இப்போ சீனா.. வடகொரியா போடும் பிளான்! உற்று பார்க்கும் அமெரிக்கா
பியோங்யாங்: வடகொரிய அதிபராக கிம் ஜாங் உன் சமீபத்தில் தான் ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்திருந்தார். இதனிடையே இப்போது அவர் திடீரென சீனாவுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
உலகில் எப்போதும் மர்மமாகவே இருப்பது என்றால் அது வடகொரியா தான். அங்கே இணையச் சேவையும் இல்லை. சர்வதேச ஊடகங்களும் இல்லை. இப்படி வடகொரியா உலகில் இருந்து எப்போதும் தனித்தே இருக்கும்.

இதற்குக் காரணமே அங்கு அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் தான். அவர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தாலும் அங்கே நாட்டு மக்களுக்கு அவர் போடும் கட்டுப்பாடுகள் வடகொரியா மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்துள்ளது.
வடகொரியா: இந்த கிம் ஜாங் வடகொரியாவை விட்டு வெளியே வரவே மாட்டார். இதற்கிடையே மிகவும் அரிய நிகழ்வாக அதிபர் கிம் ஜாங் சமீபத்தில் வடகொரியாவிலிருந்து வெளியே வந்திருந்தார். ரஷ்ய அதிபர் புதினை பார்க்க அவர் வடகொரியாவை விட்டு வெளியே வந்தார். கடந்த 4 ஆண்டுகளில் கொரோனா பரவலுக்குப் பிறகு கிம் ஜாங் வடகொரியாவை விட்டு வெளியே வருவது இதுவே முதல்முறையாகும்.
வடகொரிய அதிபருக்கு ஸ்பெஷலாக ரெடி செய்யப்பட்ட குண்டு துளைக்காத பச்சை நிற ரயில் அவர் ரஷ்யா சென்றார். விமானத்தில் சென்றால் சில மணி நேரத்தில் போய்விடலாம் என்ற போதிலும், அவர் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுத்தார். இதனால் சுமார் 40 மணி நேரம் பயணித்து அவர் ரஷ்யா சென்றார். அமெரிக்கா இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த போதிலும், அதையெல்லாம் கிம் ஜாங் கண்டுகொள்ளவில்லை.

ரஷ்ய அதிபருடன் சந்திப்பு: சைபீரியாவில் வைத்து புதினை நேரில் சந்தித்த கிம் ஜாங், சுமார் 4 மணி நேரம் அவருடன் தீவிர ஆலோசனையில் இறங்கினார். இந்த மீட்டிங்கில் ராணுவம் தொடங்கி தொழில்நுட்பம், ஆயுதங்கள் எனப் பல விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திடீரென இப்போது சீனாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சீனா உடனான கூட்டுறவு உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக வடகொரியாவில் உள்ள அரசு நிறுவனமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்குக் கடிதம்: இந்த மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே கிம் ஜாங் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்
தனது கடிதத்தில் கிம் ஜாங், "வடகொரியாவும் சீனாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. இந்த புதிய காலத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். இரு நாட்டு மக்களின் விருப்பங்களையும் கனவுகளையும் நிறைவேற்ற இரு நாடுகளும் நிச்சயம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். சீனாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவே இருக்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கவனிக்கும் அமெரிக்கா: இப்படி முதலில் ரஷ்யா, அடுத்து இப்போது சீனா என்று வடகொரியா அதிபர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளைத் தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூர்ந்து கவனித்தே வருகிறது. இவை சர்வதேச அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications