அன்று அமெரிக்கா! இன்று கனடா! ஜாதி பாகுபாட்டிற்கு எதிராக சட்டம்! எதிர்க்கும் இந்து குழு! ஏன் தெரியுமா
ஜாதிய பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்களை உலக நாடுகள் கொண்டு வருகிறது.
டோராண்டோ: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஜாதிய பாகுபாட்டிற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இப்போது கனடாவின் டொராண்டோவிலும் சாதிய பாகுபாடு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது.
இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலும் சென்று குடியேறி வருகின்றனர். டெக் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால்.. இயல்பாகவே அவர்கள் பல்வேறு பகுதிகளிலும் சென்று செட்டிலாகி வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் கணிசமாக இந்தியர்கள் உள்ளனர். இந்த நாடுகளில் குறிப்பிட்ட சில நகரங்களில் இந்தியர்களின் மக்கள் தொகை அதிகமாகவே இருக்கும்.

இந்தியர்கள்
இந்தியர்கள் அதிகளவில் செட்டிலாகி வரும் நிலையில், சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பிட்ட சாதியினர் மீது பாகுபாடு காட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே கடந்த மாதம், சியாட்டில் நகரில் சாதிய பாகுபாட்டைத் தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஒரு இந்திய-அமெரிக்க அரசியல்வாதி சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டக் கூடாது என்ற மசோதாவைக் கொண்டு வந்தார். அவரது தீர்மானத்திற்கு முழு ஆதரவு கிடைத்த நிலையில், அது நிறைவேறியது. இதன் மூலம் ஜாதிய பாகுபாட்டைத் தடை செய்த முதல் அமெரிக்க நகர் என்ற பெயரை இது பெற்றுள்ளது.

அமெரிக்க நகர்
சியாட்டில் நகர சபையில் க்ஷாமா சாவந்த் என்ற இந்திய அமெரிக்க அரசியல்வாதி கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ஆறு வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைத்தது. இந்த முடிவு அமெரிக்காவில் ஜாதி பாகுபாடு பிரச்சினையில் வரும் காலத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனிடையே இதே ஜாதி பாகுபாடு விவகாரம் இப்போது கனடாவிலும் எழுந்துள்ளது. இது தொடர்பான விவகாரம் டொராண்டோ பள்ளி வாரியத்தில் பரிசீலனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

கனடா
கடந்த மார்ச் 8ஆம் தேதி நடந்த கூட்டத்தில், இந்த விவகாரத்தில் டொராண்டோ மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவெடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த குழு ஜாதிய பாகுபாடு விவகாரம் குறித்து ஆலோசித்த நிலையில், இந்த பிரச்சினையில் தங்களுக்கு போதுமான நிபுணத்துவம் இல்லை என்று வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியே சாதிய பாகுபாட்டைத் தடை செய்த முதல் நகரமாக சியாட்டில் இருக்கும் நிலையில், இப்போது கனடாவிலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கடிதம்
இதனிடையே அமெரிக்காவில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த க்ஷாமா சாவந்த் இது குறித்து டொராண்டோ பள்ளி வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில், "இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களிப்பதே டொராண்டோவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும். மாணவர்கள் கல்விச் சூழலில் சாதிய அவதூறுகளால் பாதிக்கப்படலாம்.. சமூகத்திலும் ஆன்லைனிலும் பாகுபாடுகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, இது குறித்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்" என்றே குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்
அதேநேரம் வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி இதற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது,. இது குறிப்பிட்ட சமூகத்தை தனிமைப்படுத்துவது போல இருப்பதாகக் கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து 21,000 மெயில்கள், போன் கால்களை செய்துள்ளனர். மேலும், பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்தினர். உறைபனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தினர். தனிப்பட்ட பிரச்சினைகளை எல்லாம் சேர்த்து சாதிய பாகுபாடு என்று சொல்லி சட்டத்தைக் கொண்டு வருவது இனவெறி என்றும் கூறுகின்றனர்.

எதிர்ப்பு
இது குறித்து வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணியின் நிகுஞ்ச் திரிவேதி கூறுகையில், "பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டிய அரசியல் தலைவர்கள், இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுகிறார்கள்... குறிப்பிட்ட குழுக்கள் திட்டமிட்டுப் பரப்பும் வெறுப்பு பிரச்சாரங்களை எதிரொலிக்கிறார்கள். இது மீண்டும் காலனித்துவ மனப்பான்மையை விளக்குகிறது" என்றார். இந்த விவகாரம் குறித்து கனடாவில் இரு தரப்பிற்கும் இடையே இன்னும் மோதல் போக்கே நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications