இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்கவே மாட்டேன்.. ஆஸி கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்
அகமதாபாத்: அகமதாபாத்திலிருந்து லண்டன் கிளம்பிய விமான விபத்தில் சிக்கிய சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா முன்னாள் ஊழியர் கூறிய தகவலுடன் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இனி ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று முன் தினம் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானம் தீயில் கருகிய நிலையில் அதில் பயணித்த 241 பேர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் 30க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மற்றவர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இன்று மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
டாடா நிறுவனம் நிறுவனம் சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதைகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்து வருகின்றன. மறுபக்கம் விபத்து குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் டேவிட் வார்னர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏர் இந்தியா குழுவில் பணியாற்றிய முன்னாள் ஊழியரின் கமென்டை ஸ்க்ரீன் ஷாட்டாக பகிர்ந்துள்ளார். விவேக் படேல் என்பவரின் அந்த கமென்டில், "நான் ஏர் இந்தியாவின் முன்னாள் ஊழியர். விபத்துக்குள்ளான விமானத்தில் அடிக்கடி பயணித்துள்ளேன்.
அந்த விமானத்தில் நீண்ட காலமாகவே பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக விமானத்தில் உள்ள விமானிகள், பொறியாளர்கள், குழுவினர் உள்பட அனைவருமே லாக் புக்கிலும் அதிகம் குறிப்பிட்டுள்ளோம். ஆனால் பெரும்பாலான பொருட்களுக்கு அந்த நிறுவனத்திடம் ஸ்பேர்கள் இல்லை. பிரச்னைகளை சரி செய்யாமல் இயங்கி வந்தது.
ஒருமுறை நான் இருந்தபோதே இதில் இன்ஜின் ஃ பெயிலியர் ஆகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக விமானம் தரையிறங்கி விட்டதால் உயிர் தப்பினோம். இப்போது போலவே விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பிரச்னை ஏற்பட்டது. நிறுவனத்தின் இந்த குறைபாடுகளை அவர்கள் வெளியில் சொல்ல அனுமதிக்க மாட்டார்கள். நிறுவனம் எந்த பொறுப்பும் ஏற்காமல் ஊழியர்களை தான் குறை சொல்வார்கள்." என்று கூறியிருந்தார்.
இந்த கமென்டின் ஸ்க்ரீன் ஷாட்டுடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேவிட் வார்னர், "இந்த தகவல் உண்மையாக இருந்தால் இது பேரதிர்ச்சியான செய்தி. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு பிறகு இனிமேல் எப்போதும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க மாட்டேன். மீண்டும் சொல்கிறேன் எப்போதும் பயணிக்க மாட்டேன்." என்று ஏர் இந்தியாவை டேக் செய்து கூறியுள்ளார்.
டேவிட் வார்னர் ஏர் இந்தியாவை விமர்சிப்பது இது முதல்முறை அல்ல. அவர் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் திரைப்பட நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது ஏர் இந்தியா விமானத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக டேவிட் வார்னர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு ஏர் இந்தியா நிறுவனமும் அப்போது வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications