இம்ரான்கான்தான் காரணம்.. சவுதி விரைந்த அஜித் தோவல்.. முகமது பின் சல்மானுடன் 2 மணிநேரம் தீவிர ஆலோசனை
Recommended Video
சவுதி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்குவதற்காக சவுதி அரேபியாவில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அந்த நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக பாகிஸ்தான் அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், ஜம்மு காஷ்மீரில் உள்ள மக்கள் இந்திய ராணுவத்தின் பிடியில் சிக்கி துன்புறுத்தப்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

சீனா, மலேசியா
இருப்பினும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை. சீனா, மலேசியா ஆகிய இரு நாடுகளும்தான் பகிரங்கமாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேசியுள்ளன. ஆனால் அரபு நாடுகள் கூட இவ்வாறு கருத்து கூறவில்லை.

இம்ரான்கான்
ஜம்மு காஷ்மீரில் வாழ்வோரில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள் என்பதால் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை திரட்ட, பாகிஸ்தான் தொடர்ந்து, முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெட்டாவில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்கானை, சந்தித்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருந்தார் இம்ரான் கான்.

சவுதி விரைந்தார்
இந்த நிலையில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீரென சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். அவர் இன்று, முகமது பின் சல்மானுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாகவும், இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்தியா கவனம்
இம்ரான்கான் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக அரபு நாடுகள், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு செவிசாய்த்து விடக் கூடாது என்பதில் இந்தியா மிகுந்த கவனமாக இருந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் அஜித் தோவலின் சவுதி அரேபியா விஜயம் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications