ஈரான் அருகே களமிறக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பல்.. டிரம்பின் அடுத்த பிளான் என்ன! உச்சக்கட்ட பதற்றம்
வாஷிங்டன்: மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டு அரசுக்குப் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிடலாம் என டிரம்ப் மிரட்டி வரும் சூழலில், அமெரிக்கப் போர்க் கப்பல் குழு இப்போது மத்தியக் கிழக்கு கமேண்ட் பிராந்தியத்திற்கு விரைந்துள்ளது.. இதனால் ஈரான் மீது அமெரிக்கா சீக்கிரமே தாக்குதல் நடத்தலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
மத்தியக் கிழக்கு நாடான ஈரானில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராடி வருகிறார்கள். போராட்டத்தை மிகக் கடுமையாக கமேனி அரசு ஒடுக்கி வருகிறது. இந்தப் போராட்டங்களில் இதுவரை சுமார் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கப் போர்க்கப்பல்
இதற்கிடையே இந்த பதற்றங்களுக்கு மத்தியில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் "ஆபிரகாம் லிங்கன்" போர்க்கப்பல், நேற்று திங்களன்று அமெரிக்க மத்திய கமேண்ட் பகுதியின் எல்லைக்குள் வந்துள்ளது. இது சர்வதேச அளவில் கவனிக்க வைக்கும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.
ஈரானில் போராட்டங்கள் தொடரும் நிலையில், அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா தலையிட வேண்டி இருக்கும் என டிரம்ப் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். இந்தச் சூழலில் அமெரிக்கப் போர்க்கப்பல் மத்தியக் கிழக்கு கமேண்டிற்கு போய் இருப்பது ஈரான் மீது டிரம்ப் வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிடலாம் என்ற புதிய யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
போர்க்கப்பல் டீம்
நிமிட்ஸ் வகை அணுசக்தி விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (CVN-72) மற்றும் கேரியர் ஸ்ட்ரைக் குரூப் 3இன் முதன்மை கப்பல் ஆகியவை கடந்த வாரம் தான் மலாக்கா நீரிணை வழியாகச் சென்றது. அத்துடன் யுஎஸ்எஸ் ஃபிராங்க் இ. பீட்டர்சன் ஜூனியர் (DDG-121), யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயான்ஸ் (DDG-111) மற்றும் யுஎஸ்எஸ் மைக்கேல் மர்ஃபி (DDG-112) ஆகிய மூன்று ஆர்லீ பர்க் வகை வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளைச் சுமந்த போர்க்கப்பல்கள் அணிவகுத்துச் சென்றன.
பிரஷர்
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கமேண்ட் பிரிவு தனது சோஷியல் மீடியா பக்கத்தில், "இந்த கேரியர் மற்றும் அதன் போர்க்கப்பல் குழு பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்குடன் தற்போது மத்தியக் கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டது. மத்தியக் கிழக்கில் இருந்த யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் கடந்த அக்டோபரில் கரீபியனுக்கு அனுப்பப்பட்ட பிறகு, அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று மத்திய கிழக்குப் பகுதிக்குள் நுழைவது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கை ஈரான் மீது பிரஷர் போடுவதாகவே இருக்கிறது.
டிரம்ப்
முன்னதாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அமெரிக்கக் கப்பல்கள் மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர் மேலும், "மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு நமது கப்பல்கள் விரைந்துள்ளன. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே.. ஒருவேளை நாம் அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. அமைதியாகப் போராடும் ஈரான் மக்கள் மீது மரண தண்டனையை நிறைவேற்றினால் அமெரிக்கா தலையிட வேண்டி இருக்கும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
அதேநேரம் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தலைமை எச்சரித்துள்ளது. இதனால் மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் எங்கு மீண்டும் ஒரு போர் வெடிக்குமோ என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications