இந்தியாவை தப்பா நினைக்காதீங்க.. மோதலுக்கு நடுவே டோனை மாற்றிய வங்கதேச ராணுவ தளபதி.. கவனிச்சீங்களா?
டாக்கா: இந்தியா நமக்கு முக்கியமான அண்டை நாடு. நாம் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். எந்த நாடும் மற்றொரு நாட்டை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. சமத்துவ அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னமும் நல்லுறவு உள்ளது. இந்தியா நம் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நாம் நினைக்கக் கூடாது என்று வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக செயல்பட்டு வந்தார். ஆனால் முகமது யூனுஷ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார். அதோடு நமக்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து செயல்படுவதில் ஆர்வமாக இருக்கிறார்.
இதனால் தான் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. வங்கதேசம் தற்போது நம்முடன் வீரியமாக மோதலை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியா - வங்கதேசம் உறவு பற்றி வங்கதேச ராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அந்த நாட்டின் Prothom Alo என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்
அதாவது ‛‛இந்தியா - வங்கதேசம் இடையே பல பிரச்னைகள் உள்ளன. நீர் பகிர்மான பிரச்னை, எல்லைப் பிரச்னை ஆகியவை இதில் அடங்கும். இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளதே. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு வாக்கர் உஸ் ஜமான் இந்தியாவுடன் மோதலை கடைப்பிடிக்க விரும்பவில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார். அதோடு வங்கதேசத்துக்கு இந்தியா எவ்வளவு முக்கியம் என்பதை அவர் உணர்த்தி உள்ளார். இதுதொடர்பாக வாக்கர் உஸ் ஜமான் கூறியதாவது:
வங்கதேசம் அமைதியான சூழலை விரும்புகிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை என்பது தேவையாக உள்ளது. இந்த இரண்டும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சி பணி செய்ய முடியாது. அதேபோல் நல்ல அரசையும் நடத்த முடியாது. இதனால் நாம் சகிப்புத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.
அதேபோல் நாம் அண்டை நாடுகளின் நலன்களுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டோம். அதேபோல் நமது நலன்களுக்கு எதிராக அண்டை நாடுகளும் எதையும் செய்யாது என்று நம்புகிறோம். இந்தியா நமக்கு முக்கியமான அண்டை நாடு. நாம் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம். மறுபுறம், இந்தியாவும் நம்மிடம் இருந்து பல வசதிகளை பெறுகிறது.
உதாரணமாக இந்தியாவில் இருந்து ஏராளமானோர் வங்கதேசத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் தினசரி ஊதியம் அடிப்படையில் வேலை செய்கின்றனர். அதோடு அந்த பணிகள் அவர்களின் நிரந்தர வேலையாகவே இருக்கிறது. மறுபுறம் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். இப்படி இருநாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து தான் உள்ளது. இதனால் வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மையில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் உறவு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சமத்துவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில் அமைய வேண்டும். அதோடு எந்த நாடும் மற்றொரு நாட்டை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. சமத்துவ அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னமும் நல்லுறவு உள்ளது. இந்தியா நம் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நாம் நினைக்கக் கூடாது. அப்படி நடந்தால், அது நமது நலன்களுக்கு எதிரானதாகிவிடும்'' என்றார்.












Click it and Unblock the Notifications