ஈரானை இன்று தாக்கும் டிரம்ப்? அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை.. ஓமனில் என்ன நடக்கும்? திக்திக்
மஸ்கட்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இன்று ஓமனில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. நேரடி பேச்சுவார்த்தையை அமெரிக்கா விரும்பும் நிலையில் மறைமுக பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாவிட்டால் மோசமான விளைவு ஏற்படும் என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் ஈரான் மீது இன்று அமெரிக்க குண்டு வீசி தாக்குதலை நடத்த உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இருநாடுகள் இடையேயான இந்த பேச்சுவார்த்தை எப்படி நடக்கும்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பிரச்சனை என்பது நீண்டகாலமாக உள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல் காரணமாக ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதனை அமெரிக்கா விரும்பவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும்.

அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படை தளங்கள் மற்றும் ஈரானின் அண்டை நாடாக உள்ள அமெரிக்காவின் தோழமை நேஷன் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் ஈரானின் அணுஆயுதம் தயாரிப்பை நிறுத்த வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
அணுசக்தி திட்டம் மூலம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு, டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். இப்படியான சூழலில் தான் இன்று ஓமனில் வைத்து அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை என்பது நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்கிறார். ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி பங்கேற்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் ஓமன் மத்தியஸ்தம் செய்கிறது. அதோடு இந்த பேச்சுவார்த்தை என்பது நேரடியாக அமெரிக்காவுடன் இருக்காது. மறைமுகமாக தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாறாக அமெரிக்காவோ ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஈரான் கூறுவது போல் மறைமுக பேச்சுவார்த்தை என்பது அமெரிக்க பிரதிநிதிகள் ஒரு அறையும், ஈரான் பிரதிநிதிகள் இன்னொரு அறையிலும் இருப்பார்கள். இருதரப்புக்கும் இடையே ஓமன் மூலம் தகவல்கள் பரிமாறப்படும். அதேவேளையில் அமெரிக்கா கூறும் நேரடி பேச்சுவார்த்தை என்பது ஒரே மேஜையில் ஒரு புறம் அமெரிக்கா பிரதிநிதிகளும், இன்னொரு புறம் ஈரான் பிரதிநிதிகளும் இருப்பார்கள். இருவரும் நேருக்கு நேர் விவாதிப்பார்கள்.
ஆனால் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவும், அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையையும் விரும்புகிறது. இதனால் ஓமனில் இன்று என்ன நடக்கும்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இதனால் தொடக்கத்திலேயே அமெரிக்கா - ஈரான் இடையே நேரடி பேச்சுவார்த்தையா? மறைமுக பேச்சுவார்த்தையா? என்பதில் பிரச்சனை ஏற்படலாம். அதன்பிறகு ஒரு முடிவுக்கு இருநாடுகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட அது சுமூகமாக முடிவதில் பல சிக்கல்கள் உள்ளன.
இதற்கிடையே தான் இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் முக்கிய கருத்தை தெரிவித்தார். அதன்மூலம் ஈரானை பகிரங்கமாக மிரட்டினார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப்,‛‛ஈரானிடம் தற்போது அணுஆயுதம் இல்லை. ஈரானிடம் நேரடியாக அமெரிக்கா பேச உள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும். இல்லாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகவும் மோசமான தினமாக மாறிவிடும். ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முடியுமா? ஒன்றாக அனைவரும் வாழ முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்'' என்று கூறியுள்ளார்.
இதனால் இன்றைய நாள் ஈரானுக்கு மிகவும் முக்கிய நாளாகும். அமெரிக்காவுடன் அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் சிக்கல் ஏற்படும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக ஈரானை தாக்கலாம். ஈரான் மீது குண்டுகளை வீசலாம். இதற்கு ஏற்ப அமெரிக்கா மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானை சுற்றிய படை தளங்களில் 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. அதோடு குண்டுவீச்சுக்கு பெயர் பெற்ற பி2 பாம்பர்ஸ் என கூறப்படும் போர் விமானங்களை அமெரிக்கா தயாராக வைத்துள்ளது. இதனால் ஓமனில் இன்று நடக்கும் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என்பது அதிக கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications