முதல்வர் ஸ்டாலின் விசிட்டுக்கு நடுவே.. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி.. என்னாச்சு?
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சென்றுள்ள நிலையில் ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
அதன்பிறகு ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்பட பல நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில்தான் இன்று ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது இன்று பிற்பகல் 3.33 மணியளவில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம் சார்பில், ‛‛ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 107 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 65 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டு இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம், உயிர்பலி உள்ளிட்டவை குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கம் காரணம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. உலகில் அதிக நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்.
இதற்கிடையே தான் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ளார். சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தொழில் முதலீட்டாளர்களை அழைக்க 9 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23ம் தேதி புறப்பட்டு சென்றார்.
ஆவேச தாக்குதல் நடத்திய திமுகவினர்.. கரூர் அரசு மருத்துவமனையில் 4 வருமான வரி துறை அதிகாரிகள் அனுமதி
முதலில் சிங்கப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் 3 முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து, வர்த்தக உறவுகள், முதலீடுகள் குறித்து பேசியதுடன், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். மேலும் சிங்கப்பூர் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை சந்தித்து அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூரில் 2 நாள் பயணத்தை முடித்த முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றார். இன்று
ஒசாகாவில் ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான ஜெட்ரோவுடன் இணைந்து, அங்கு இன்று (மே 26) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின் ஒசாகா நகரில் இருக்கும் நிலையில் தான் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.