மறைக்க ஏதுமில்லை.. பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ‛டச்' வைத்தது உண்மை தான்.. பிலாவல் பூட்டோ ஒப்புதல்
இஸ்லாமபாத்: காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை நம் படை வீரர்கள் கொடுக்க உள்ளனர். எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானப்படை விமானங்களும் அவசர கால பயிற்சியை தொடங்கி உள்ளன.
மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இருப்பதாக என்ஐஏ தெரிவித்தள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையின் அறிவுரைப்படி தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆனாலும் கூட பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் காலம் காலமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதனை சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் உறுதி செய்திருந்தார். இவர் அளித்த பேட்டியில், ‛‛பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குகிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கிறது பயங்கரவாதிகளின் பின்னால் இருந்து பாகிஸ்தான் செயல்படுகிறது?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ‛‛ நாங்கள் சுமார் 30 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கும், பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளுக்காகவும் இந்த மோசமான வேலைகளை செய்து செய்தோம். அது தவறு. அதற்காக நாங்கள் துன்பப்பட்டோம்'' என்று கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தான் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரும், பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அளித்த பேட்டியில் அதனை மீண்டும் உறுதி செய்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் சார்பில், ‛‛பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததை ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் உறுதி செய்துள்ளாரே'' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பிலாவல் பூட்டா, ‛‛பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தமும் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.
ஈரான் போரின்போது பாகிஸ்தான் முஜாகீதினுக்கு ஆதரவாக இருந்தது.மேற்கத்திய நாடுகளின் சப்போர்ட்டுடன் முழு ஆதரவை வழங்கினோம்'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது மீண்டும் அம்பலமாகி உள்ளது.
மேலும் அவர் அளித்த பேட்டியில், ‛‛பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு. ஆனால் சிந்து மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் நாங்களும் போருக்கு தயாராக இருக்கிறோம்'' என்றார். தற்போது சிந்து நதி நீரை நம் நாடு நிறுத்தி உள்ள நிலையில் நம்முடன் மோதலுக்கு தயாராக இருப்பதாக பிலாவல் பூட்டோ மீண்டும் சீண்டி உள்ளார். முன்னதாக சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் ரத்த ஆறு ஓடும் என்று அவர் வாய்ச்சவடால் விடுத்து இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications