ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் டெல்டா கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
ஒரு புறம் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றால், மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை படுக்கை கிடைக்காமல் போவது உள்ளிட்ட காரணங்களாலும் நோயாளிகள் உயிரிழந்தனர்.

டெல்டா கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இந்தளவு மோசமாக டெல்டா உருமாறிய கொரோனா வகை முக்கிய காரணமாகக் கூறப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகளில் டெல்டா கொரோனா வகையே மிக வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் டெல்டா கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், உலகின் மற்ற நாடுகளில் டெல்டா கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியா
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவிலும் இப்போது இதே நிலை தான். அங்கு டெல்டா கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் அங்கு 27,913 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஒரே நாளில் பதிவான வைரஸ் பாதிப்புகளில் இது தான் அதிகம். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

63 பேர் பலி
இந்நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜாவாவில் உள்ள சர்ஜிடோ மருத்துவமனையில் மட்டும் இரண்டு நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அந்த மருத்துவமனை நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வந்ததாகவும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் சமாளிக்க முடியவில்லை என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா அரசு நடவடிக்கை
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதைத் தடுக்க ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. மேலும், தொழிற்சாலை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்வது பற்றியும் ஆலோசனை செய்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications