20 நிமிடத்தில் 5000 ஏவுகணைகள்.. பெரும் குழப்பம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் திடீரென தாக்குதல் நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பலன் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில் இன்று காலை யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீனில் இருந்து ஹமாஸ் படைகள் குண்டு வீசி தாக்குதலை நடத்தினர். காலை 6.30 மணிக்கு இந்தத் தாக்குதல் ஆரம்பித்த நிலையில், அடுத்த 20 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
திடீர் தாக்குதல்: இதனால் இஸ்ரேல் நாட்டின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள பல்வேறு கட்டிடங்களில் ஏவுகணைகள் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுக்க புகை மூட்டத்தால் சூழ்ந்தது. இந்த ஏவுகணை தாக்குதலால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்துத் தெளிவாகத் தகவல்கள் இல்லை. இருப்பினும், பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கே மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பாரசூட் மற்றும் ஜீப் வழியாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமாஸ் வீரர்கள் நுழைந்துள்ளனர். துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் என்று பல்வேறு ஆயுதங்கள் அந்த ஹமாஸ் வீரர்களிடம் இருந்துள்ளது. அவர்கள் அங்குச் சாலைகளில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹமாஸ் வீரர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. மேலும், அங்கே சாலைகளில் உள்ள கார்கள், அப்பாவி பொதுமக்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்ரேல் பதிலடி: இந்தத் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நாட்டில் போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து பதிலடி கொடுக்கும் தாக்குதலையும் இஸ்ரேல் படைகள் ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக விமானப் படைகளைக் கொண்டு தாக்குதலை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரேல் பிரதமர் அந்நாட்டின் முக்கிய ராணுவ தளபதிகளுடன் உடனடியாக அவரச ஆலோசனை நடத்தினார்.
இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலில் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தனியாக இருப்பதைத் தவிர்த்துப் பாதுகாப்பு முகாம்களில் தங்கவும் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்: உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்ரேல் நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அங்கு எதாவது அவசர தேவை ஏற்பட்டால் இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலில் அங்குள்ள இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இங்குள்ள இந்தியர்கள் +97235226748 என்ற எண்ணில் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.. அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications