இடிபாடுகளில் இருந்து பிரியமானவர்களை தாங்களே தோண்டி எடுக்கும் நேபாள மக்கள்
காத்மாண்டு: அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாகக் கூறி நேபாள மக்கள் தங்கள் கைகளாலேயே இடிபாடுகளை தோண்டி தங்களின் உறவினர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியிருக்கும் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதாலும், அவ்வப்போது கனமழை பெய்வதாலும் மீட்பு பணி பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் அரசின் மீட்பு பணி மெதுவாக நடப்பதாக நேபாள மக்கள் தெரிவித்துள்ளனர். அரசின் செயல்பாட்டை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்கள் கைகளாலேயே இடிபாடிகளை அகற்றி தங்கள் பிரியமானவர்களின் உடல்களை மீட்டு வருகிறார்கள்.
உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளபோதிலும் அதை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள பிரபல தரஹாரா கோபுரம் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளில் தனது அண்ணன் மற்றும் அண்ணியின் உடல்களை தேடும் பிரதீப் சுப்பா கூறுகையில்,
உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது கொடுமையாக உள்ளது. அதனால் தான் நாங்களே உடல்களை தேடி எடுத்து வருகிறோம். எங்கள் கைகள் தான் இயந்திரம். வெறுங்கையால் இடிபாடுகளை அகற்றி வருகிறோம் என்றார்.
மீட்பு
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 50 மணிநேரம் கழித்து காத்மாண்டுவில் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவரை நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டுள்ளனர். அந்த பெண் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications