திடீரென மாயமான 'அனபெல்' பொம்மை! அமானுஷ்ய சம்பவங்களால் ஆடிப்போன லூசியானா நகரம்
வாஷிங்டன்: சமீபத்தில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் பொதுமக்களின் பார்வைக்காக 'அனபெல்' பொம்மை கொண்டுவரப்பட்டது. இந்த சமயத்தில் பொம்மை காணாமல் போய் விட்டதாகவும், இதனால் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்ததாகவும் அந்த ஊர் மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'அனபெல்' படத்தில் வரும் பொம்மைக்கு பெரிய வரலாறு இருக்கிறது. 1970ம் ஆண்டு கனெக்டிகட்டின் ஹார்ட்ஃபோர்டு, நர்சிங் மாணவி ஒருவருக்கு இந்த பொம்மை பரிசாக கிடைத்திருக்கிறது. வழக்கமாக பொம்மைகளை வைக்கும் இடத்தில் இதனை அவர் வைத்திருக்கிறார். ஆனால், பொம்மையிடம் வித்தியாசமான நடத்தை தெரிந்திருக்கிறது.

காலையில் பார்த்த இடத்தில் மாலையில் அந்த பொம்மை இருக்காது. வேறு இடத்தில் இருக்கும். மாணவியின் ரூமுக்கு யாரும் வரமாட்டார்கள், அப்படி இருக்கையில் இந்த பொம்மை எப்படி இடம் மாறியது? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில், ஒருநாள் இரவு இந்த பொம்மை அந்த மாணவியின் கழுத்தை நெரிக்க முயன்றிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து அமானுஷ்யங்களை ஆய்வு செய்பவர்களிடம் இந்த பொம்மையை மாணவி கொடுத்திருக்கிறார்.
அவர்கள் ஆய்வு செய்ததில், பொம்மைக்குள் 'அனபெல்' என்கிற சிறுமியின் ஆவி இருப்பதாக கூறியிருக்கின்றனர். இதனையடுத்து இந்த பொம்மை பலர் கைகளுக்கு மாறியிருக்கிறது. போகும் இடங்களில் துர் சம்பவங்கள் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இறுதியாக இந்த பொம்மையை அமானுஷ்ய அருங்காட்சியகம் ஒன்று தற்போது பராமரித்து வருகிறது. சில நாட்கள் இந்த பொம்மை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது வழக்கம்.
அப்படித்தான் லூசியானா மற்றும் நியூ ஆர்லியன்ஸ் பகுதிக்கு சுற்றுபயணமாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பொம்மை ஊருக்குள் நுழைந்த நேரத்தில், லூசியானா பகுதியில் உள்ள ஒரு தோட்ட வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது. இதற்கு இந்த பொம்மைதான் காரணம் என்று பலரும் சோஷியல் மீடியாவில் உருட்டி வருகின்றனர். மட்டுமல்லாது பொம்மை காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனையடுத்து பொம்மை பற்றி பலரும் அச்சம் கொள்ள தொடங்கினர்.
தீ விபத்து, பொம்மை காணாமல் போனதை தொடர்ந்து, நியூ ஆர்லியன்ஸ் சிறையிலிருந்து 10 கொடூர குற்றவாளிகள் தப்பித்துள்ளனர். இதெல்லாம் இந்த பொம்மை செய்யும் வேலைதான் என்று வதந்தி பரவின.. லூசியானவும், நியூ ஆர்லியன்ஸ் மாகாணங்களிலும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பலரும் போலீசுக்கு தகவல் கொடுக்க, விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ், தீ விபத்துக்கும் பொம்மை காணாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் பொம்மை காணாமல் போகவில்லை. தீ விபத்துக்கு மின் கசிவுதான் காரணம் என்று விளக்கமளித்துள்ளது.
'அனெபெல்' பொம்மையை பராமரித்து வரும் அருங்காட்சியகமும் இதை உறுதி செய்திருக்கிறது. பொம்மை கண்ணாடி பெட்டகத்திற்குள் பத்திரமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறது. இருப்பினும் பொம்மையால் எற்பட்ட பீதி இன்னும் பலருக்கு குறையவில்லை.












Click it and Unblock the Notifications