தம்பதிகள் ஒன்றாக தூங்கக் கூடாது, கட்டி அணைக்க கூடாது, முத்தமிட கூடாது.. ஷாங்காயில் வினோத விதிகள்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ள வேண்டாம், கட்டி பிடிக்க வேண்டாம், ஒன்றாக படுத்து தூங்க வேண்டாம் உள்ளிட்ட விதிகளை விதித்துள்ளது பெரும் நகைப்புக்குள்ளாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உருவானது. இதையடுத்து அது உலக நாடுகளில் பரவியது. மற்ற நாடுகளில் பரவிய நிலையில் சீனாவில் குறைந்துவிட்டது.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வுகானில் தொற்று அதிகரித்ததை போல் இந்த ஆண்டு ஷாங்காய் நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

ஷாங்காய்
ஷாங்காயில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றால் அது கொரோனா பரிசோதனைக்கு மட்டுமே வர வேண்டும் என தெரிவித்துள்ளது. மக்கள் நெரிசல் அதிகமான பகுதிகளில் சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஆளில்லா விமானங்கள்
சிறிய ஆளில்லா விமானங்கள் மூலம் சீன சுகாதாரத் துறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உங்கள் ஆசையை சிறிது காலத்திற்கு ஒத்தி வையுங்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள்
ஷாங்காய் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அதன்படி வீடுகளில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண வேண்டாம். அனைவரும் தனித்தனியாக உறங்க வேண்டும், தம்பதிகள் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நெட்டிசன்கள் கிண்டல்
குறிப்பாக முத்தமிட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்கள். இந்த விதிகளை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஷாங்காயில் உள்ள மக்கள் இறைச்சி, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்குவதற்கு கடும் அவதிப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications