ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர் தீக்குளித்து தற்கொலை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (29), கடந்த 2013ம் ஆண்டு அங்கிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு அவருக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புகலிடம் நிராகரிக்கப்பட்டு தன்னை நாடு கடத்திவிடுவார்கள் என்ற பயத்தில் இருந்த சீமான்பிள்ளை, கடந்த சனிக்கிழமை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.
சீமான்பிள்ளை தன்னை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் இலங்கை ராணுவத்தின் அடக்குமுறையை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதனால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தன்னுடன் வசித்தவர்களிடம் சீமான் பிள்ளை புலம்பியதாக கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தமிழ் அகதிகள் சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.