தீவிரவாதிகள் கைகளில் ’சீன’ டெக்னாலஜி.. பாகிஸ்தான் கொடுத்த ’ஸ்பெஷல்’ பயிற்சி! சல்லடை போடும் ராணுவம்
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், 25க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள தீவிரவாதிகளை கைது செய்ய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் காடுகளில் மறைந்திருந்து உயிர் வாழ பயிற்சி எடுத்தவர்கள் என்றும், சீனாவில் தயாரிக்கப்பட்ட சாதனங்கள் அவர்கள் கைகளில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்து சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயத்தின் லஸ்கர்- இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பாகிஸ்தான் உடனான பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருக்கின்றன. மேலும் முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி முழு அதிகாரம் கொடுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க தாக்குதலில் ஈடுபட்ட ஹாசிம் மூசா உள்ளிட்ட தீவிரவாதிகளை கைது செய்ய இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ராணுவத்தோடு சேர்ந்து மத்திய பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசும் தேடுதல் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த ஆபரேஷனில் தேசிய புலனாய்வு முகமையும் ஈடுபட்டுள்ளது. காஷ்மீரின் மலைப்பாங்கான நிலப்பரப்பு, குகைகள், அடர்ந்த காடுகள் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் ராணுவம் சுற்றி வளைத்தாலும் திடீர் திடீரென தப்பி வருகின்றனர்.
மேலும் உளவாளிகள், பொதுமக்கள் சிலர் பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது பஹல்காமின் பள்ளத்தாக்கில் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாரமுல்லா, குப்வாரா, அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற்றாலும் அதனை கண்டறிய முடியவில்லை. இதை அடுத்து அப்பகுதி முழுவதும் பிற தொழில்நுட்ப தரவுகளைக் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதோடு 15 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடர்ந்த காடுகள் தீவிரவாதிகள் இத்தனை நாள் தாக்குப் பிடிக்க காரணம் குறித்த சில தகவல்கள் கசிந்து இருக்கிறது. அதாவது தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹாஸீம் மூசா பாகிஸ்தானின் சிறப்பு படையில் பாரா கமாண்டமாக பணியாற்றியவர் என்றும் அதற்கு பிறகு லஸ்கர் - இ - தொய்பா அமைப்பிடம் பயிற்சி பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. இதே போல மற்ற தீவிரவாதிகளுக்கும் அடர்ந்த காடுகளில் எப்படி நீண்ட நாட்கள் மறைந்து வாழ்வது என பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் செல்போன், வாக்கிடாக்கி உள்ளிட்டவை மூலம் தொடர்பு கொண்டால் பாதுகாப்பு படையினர் தங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் சீனாவில் தயாரிக்கப்பட்ட அல்ட்ராசெட் போன்கள் உள்ளிட்டவை மூலம் ஆஃப்லைனில் தீவிரவாதிகள் அவரது ஆதரவாளர்கள் இடையே தகவல் பரிமாற்றம் நடப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அல்ட்ரா சவுண்ட் மேப்பிங் தொழில்நுட்ப வசதியுடன் இந்திய ராணுவத்தினர் தகவல் பரிமாற்றம் குறித்து தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். விரைவில் தீவிரவாதிகள் ராணுவத்தின் கையில் சிக்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications