ஈராக்கில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் பலி, 45 பேர் காயம்
பாக்தாத்: ஈராக்கில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் 33 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் காயம் அடைந்தனர்.
ஈராக்கின் வடக்கு மாகாணமான நினேவேயின் தலைநகர் மொசுல் அருகே உள்ளது பாசிகா. இந்த நகரில் நேற்று மதியம் சவ ஊர்வலம் ஒன்று நடந்தது. அப்போது அந்த ஊர்வலத்தில் புகுந்த ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 27 பேர் பலியாகினர், 36 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இது தவிர மத்திய ஈராக்கில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர் மற்றும் 9 பேர் காயம் அடைந்தனர்.
அபு கிரைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தெருவோரம் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர், 5 பேர் காயம் அடைந்தனர். இது தவிர பாக்தாதில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ரமதி நகரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். மேலும் துஜைல் நகர் அருகே சாலையோரம் வெடிகுண்டு வெடித்ததில் ஒரு ஆண், ஒரு பெண் பலியாகினர், 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications