கிடைத்துள்ள சிக்னல்கள் மாயமான விமானத்தினுடையது தான்... ஆஸி. பிரதமர் நம்பிக்கை
சிட்னி: கடலில் தற்போது கிடைத்து வரும் சிக்னல்கள் மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து தான் வந்திருக்க வேண்டும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட்.
கடந்த மாதம் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் ‘எம்எச் 370' இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மாயமான விமானம் குறித்து உலா வரும் பல முரண்பட்ட தகவல்களுக்கு விடை சம்பந்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டி மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

எனவே, விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதற்குத் தகுந்தார்போல், இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டியின் சிக்னல் கிடைக்கப் பெற்றதாக தகவல் வெளியானது. எனவே, அந்த ஒலியின் மூலம் கறுப்பு பெட்டி கிடக்கின்ற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் ஈடுபட்டுவருகின்றன.
மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்' சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது.
இந்நிலையில், கிடைக்கப் பெற்றுள்ள இந்த நான்கு சிக்னல்களுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் இந்தத் தேடுதல் வேட்டை நடைபெறுவதகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications