வார்னே சுழலில் யாரும் தப்பவில்லை..வாழ்க்கை சுழலில் வார்னே தப்பவில்லை..பீர் தூவி பூ வைத்த ஆஸி மக்கள்!
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்னே நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் மெர்ல்போனில் உள்ள அவரது சிலைக்கு ஆஸ்திரேலியர்கள் பீர், சிகரெட் பாக்கெட் மற்றும் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே. சச்சின் , லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தனது அபார சுழற்பந்து வீச்சால் தடுமாற வைத்தவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன்வார்ன்.
விடைபெற்றார் ஷேன் வார்னே.. மாரடைப்பால் காலமானதாக தகவல்.. கண்ணீர் விடும் கிரிக்கெட் ரசிகர்கள்
சுழல் ஜாலம்
டெஸ்ட் போட்டியில் மட்டும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போதுவரை பல பேட்ஸ்மேன்களின் கனவில் சிம்ம சொப்பனமாக திகழ்பவர். 1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக ஆடினார். வார்ன், தனது சூழல் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். ஸ்பின்னர்கள் என்றாலே ஆல் டைம் பெஸ்ட் வரிசையில் ஷேன்வார்னேவுக்கு தனி இடம் உண்டு. இவ்வளவு புகழ் இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வார்னேவுக்கு புதிதல்ல.
திடீர் மரணம்
அதே போல் அவரது மரணமும் சர்ச்சையாகவே அமைந்துள்ளது. 52 வயதான ஷேன் வார்னே விடுமுறைகாக தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலாளர் தகவல்
தனது வில்லாவில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது. இதனிடையே, வார்னின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் ஜேம்ஸ், ஊடகங்களிடம் பேசியுள்ளார். அதில், "ஷேன் வார்ன் மூன்று மாத ஓய்வு எடுக்க திட்டமிருந்தார். அதன் தொடக்கம்தான் இது. தாய்லாந்து நேற்றுமுன்தினம் இரவுதான் வந்திருந்தார். 5.15 மணிக்கு வார்னே அறையின் கதவை நண்பகள் தட்டியுள்ளனர். அங்கே உணர்வில்லாமல் இருந்த அவருக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகலாம் என்பதால் அவர்களே முதலுதவி செய்தனர். ஆனால் காப்பாற்ற முடியவில்லை எனவும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.
கண்ணீர் அஞ்சலி
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் சேவாக் உள்ளிட்டோரும் அவர்களின் மரணத்திற்கு அதிர்ச்சி தெரிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் மெல்போன் நகரத்தில் உள்ள ஷேன் வார்னே சிலைக்கு ஆஸ்திரேலிய மக்கள் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அவரது சிலைக்கு அடியில் பீர் பாட்டில்களையும் சிகரெட் பாக்கெட்டுகளையும் வைத்து தங்களது ஆதர்ச நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.