பிஞ்சுக் குழந்தைக்கு இதய நோய் - மாட்டின் இதய வால்வைப் பொறுத்தி மருத்துவர்கள் சாதனை!
லண்டன்: லண்டனில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தை ஒன்றிற்கு மாட்டின் இதய வால்வைப் பொறுத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஒரு லட்சம் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டுமே ஏற்படும் வாய்ப்புள்ள அரிய வகை நோய் ஹால்ட் அரோம் சிண்ட்ரோம்.
எலும்புகளைப் பெரிதாக்கி மாரடைப்பை உருவாக்கும் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைதான் நோவா குவிலிம்.

சிக்கலான அறுவை சிகிச்சை:
இதனையறிந்த பெற்றோர் துக்கத்தில் கதறினார்கள். இந்நிலையில் பிறந்த சில தினங்களுக்குள்ளாகவே குழந்தை நோவா, லண்டனின் ஆல்டர் ஹே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செய்யத் துணிந்த மருத்துவர்கள் முன் அதை விட சிக்கலான ஒரு சவால்.

புதிய இதய வால்வு தேவை:
ஆபரேஷனுக்கு ஒரு புதிய இதய வால்வு தேவைப்பட்டது, வயதானவர்களே உடல் உறுப்பு தானத்திற்காக பதிவு செய்து விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் போது, பிறந்த குழந்தைக்கு இதய வால்வு கிடைப்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.

மாட்டின் இதய வால்வு:
இந்த நேரத்தில்தான் மருத்துவர்கள் மிகச் சவாலான ஒரு காரியத்தை செய்ய முடிவெடுத்தனர். மாட்டின் இதய வால்வை நோவாவின் இதயத்தில் பொருத்தி மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

8 மாத குட்டிக் குழந்தை:
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் இதயம் அதன் இயல்பான நிலையை எட்டுவதற்கு சில மாதங்கள் பிடிக்கும். பிப்ரவரி 10 ஆம் தேதி பிறந்த நோவா தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது தாய் பூரிப்புடன் கூறுகிறார். தற்போது எட்டு மாதக் குட்டிப்பையனாகியிருக்கும் நோவாவுக்கு விரைவில் கை எலும்பிலும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications