ஈராக்கின் 2வது பெரிய அணையை நெருங்கும் தீவிரவாதிகள்: பாக்தாத் குடிநீருக்கு அபாயம்
பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அணையான ஹதிதா அணையை நெருங்குவதால் தலைநகர் பாக்தாத் குடிநீர் இன்றி வாட வேண்டி இருக்கலாம்.
ஈராக்கில் ஷியா பிரிவினரின் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த தீவிவரவாதிகள் பலுஜா மற்றும் மொசுல் ஆகிய நகரை கைப்பற்றினர். தற்போது அவர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய அணையான ஹதிதா அணையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் பாக்தாத் நகரையும் நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். யூப்ரடிஸ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹதிதா அணை தலைநகர் பாக்தாத்தில் இருந்து 193 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாதிகள் அணையை கைப்பற்றினால் நாட்டுக்கு கேடு என்பதால் அவர்கள் அணையை அடையும் முன்பு தேவைப்பட்டால் அறிவித்தவுடன் நீரை திறந்துவிடுமாறு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்படி தீவிரவாதிகளை தடுக்க அணையை திறந்தால் பல ஊர்கள் வெள்ளக்காடாகும் என்று அணை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அணையை தீவிரவாதிகள் கைப்பற்றினால் அவர்கள் பல ஊர்களை வெள்ளக்காடாக்கிவிடுவார்கள். மேலும் பாக்தாத் நகரம் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை வந்துவிடும்.

முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் தீவிரவாதிகளுக்கு பயந்து பலுஜா அணை மூடப்பட்டதால் நஜாப் மற்றும் திவானியா ஆகிய மாகாணங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் வாடின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications