இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்.. காசாவில் போருக்கு நடுவே மக்கள் தொழுகை!
காசா: உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக காசாவில் போருக்கு நடுவே மக்கள் பக்ரீத் தொழுகையை நடத்தியுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக நடைபெற்று வரும் போரில் சுமார் 50,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இன்னமும் போர் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இந்த நெருக்கடிக்கு மத்தியில் இன்று பக்ரீத் சிறப்பு தொழுகையில் காசா மக்கள் ஈடுபட்டனர்.

உணவு, குடிநீர், தங்குவதற்கான குடிசைகள், உயிர் காக்கும் மருந்துகள் என எல்லாவற்றிற்கும் காசாவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிலிருந்து அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்திருப்பதால், தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பார்லேஜி பிஸ்கெட், காசாவில் 2300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இப்படியான சூழலிலும் மக்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையை மேற்கொண்டிருந்தனர். போருக்கு நடுவே அவர்கள் இரண்டாவது ஆண்டாக பக்ரீதை கொண்டாடி வருகின்றனர். நொறுங்கிய மசூதியின் முன்பு மக்கள் தொழுகை செய்திருக்கின்றனர். விரைவில் நிலைமை மாறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. முன்னதாக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
"தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, சென்னை நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக - கல்வி - பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி
இஸ்லாமிய பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இ்ந்த இனிய திருநாளில் எல்லோரிடமும், இறைஉணர்வும், தியாகச்சிந்தனையும் சகோதரத்துவமும், மலரட்டும். அது மனிதகுல நல்வாழ்வுக்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதாார எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஈகை, மனிதநேயம், மதநல்லிணக்கம் ஆகிய நல்லெண்ணங்கள் தழைத்தோங்கவும், எல்லா வளமும் நலமும் அனைவர் வாழ்விலும் பெருகிட வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்து இஸ்ஸாமிய மக்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வபெருந்தகை
இன்றைய உலகம் பல்வேறு சோதனைகளை சந்திக்கும் நேரத்தில், பக்ரீத் திருநாள் நமக்கு விடுக்கும் முக்கிய அழைப்பு, ஒற்றுமையை வளர்ப்போம். மனிதநேயத்தை விரிப்போம், வெறுப்பை விலக்குவோம் என்பதுதான். இந்நன்னாளில் நமது சமூகத்தில் இனிய சகோதரத்துவம் வேரூன்றட்டும். மனிதம் வாழட்டும், வேற்றுமை ஓழியட்டும். ஒற்றுமை ஓங்கட்டும். முஸ்லிம் சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications