பாங்காக் குண்டுவெடிப்பு: 'ரெட் ஷர்ட்ஸ்' மீது சந்தேகப்படும் தாய்லாந்து அரசு
பாங்காக்: பாங்காக் குண்டுவெடிப்பு தொடர்பாக ரெட் ஷர்ட்ஸ் எனப்படும் அரசுக்கு எதிரான அமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் கோவிலுக்கு வெளியே 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 22 பேர் பலியாகினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள ஒரு மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். குண்டுவெடிப்பு தொடர்பாக ரெட் ஷர்ட்ஸ் எனப்படும் அரசுக்கு எதிரான அமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா தெரிவித்துள்ளார்.
சுற்றுலாவை நம்பியிருக்கும் தாய்லாந்தின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் இடத்தில் குண்டு வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ரெட் ஷர்ட்ஸ்
கோவிலுக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணை ரெட் ஷர்ட்ஸ் அமைப்பை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. அந்த அமைப்பினர் முன்னர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்முறையாக
தாய்லாந்தில் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த உடனேயே நாட்டின் தென்பகுதியில் உள்ள முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் தான் காரணம் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் பெரும்பாலும் நாட்டின் தென்பகுதியில் தான் செயல்பட்டு வருகின்றனர்.

போராளிகள்
சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாக ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போராடி வரும் அமைப்பு தான் ரெட் ஷர்ட்ஸ். மனித உரிமைகள் மற்றும் நீதியை உறுதிப்படுத்தும் அரசியல் மற்றும் நீதி முறை வேண்டும் என்று அந்த அமைப்பினர் கூறி வருகின்றனர்.

விவசாயிகள்
விவசாயிகள், பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள், நலத்திட்டங்கள் அல்லது ஓய்வூதியத்திற்கு தகுதி செய்யப்படாதவர்கள் தான் ரெட் ஷர்ட்ஸ் அமைப்பில் உள்ளனர். அவர்கள் கடந்த 2006ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த ராணுவ புரட்சிக்கு எதிராக போராடியவர்கள்.

குண்டுவெடிப்பு
அண்மை காலமாக தாய்லாந்தில் நடந்த பல வன்முறை சம்பவங்களுக்கு ரெட் ஷர்ட்ஸ் அமைப்பினர் மீது குற்றம்சாட்டப்பட்டது. முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு அவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தனர்.

பெண் காரணமா?
தாய் மொழியில் பேசிய பெண் ஒருவர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கோவிலுக்குள் பை ஒன்றை வைத்தது மேம்பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications