புது தலைவலி.. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு.. போலீஸ் அதிரடி.. வங்கதேசத்தில் பரபரப்பு
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக மிக மோசமான வன்முறை நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகே அங்குச் சற்று அமைதி திரும்பி இருக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது இப்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தை சில வாரங்களாகவே மாணவர் போராட்டம் புரட்டிப் போட்டது. முதலில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த போராட்டம் மெல்ல அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் திரும்பியது.

போராட்டம்: ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கே பல இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியது. இதனால் வேறு வழியின்றி ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற நிலையில், அங்கே மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
வழக்குப்பதிவு: இதற்கிடையே வங்கதேசத்தில் கடந்த மாதம் நடந்த உள்நாட்டுக் கலவரத்தின் போது போலீஸ் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முந்தைய அரசில் அங்கம் வகித்த டாப் 6 உயர் அதிகாரிகள் மீது வங்கதேச நீதிமன்றம் கொலை வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாமூன் மியா என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஏழு பேர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்யுமாறு டாக்காவில் உள்ள நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் மாமூன் மியா கூறுகிறார். அடுத்த கட்டமாக இந்த விவகாரத்தில் குற்றவியல் விசாரணையை அந்நாட்டு போலீசார் நடத்துவார்கள் எனத் தெரிகிறது. ஹசீனாவுக்கு எதிராகக் கொலை வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications