உச்சத்தில் வன்முறை.. வங்கதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் இல்லம் சூறை.. டி20 உலக கோப்பைக்கு சிக்கல்?
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் நஸ்முல் ஹசனின் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேசத்தில் தொடர் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு வரும் அக். மாதம் நடைபெற இருந்த மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் இப்போது மிக மோசமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அங்கே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தொடங்கிய மாணவர் போராட்டம் மெல்ல அந்நாட்டு அரசுக்கு எதிராகத் திரும்பியது.

அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷம் அதிகரித்தது. நிலைமை கட்டுப்படுத்த வங்கதேச அரசு எடுத்த எந்தவொரு நடவடிக்கைக்கும் பலன் கிடைக்கவில்லை.
உச்சத்தில் வன்முறை: அங்கே வன்முறை புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், ஹசீனா பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது. இதையடுத்து ஹசீனா நேற்று பிற்பகல் பதவி விலகினார். இதற்கிடையே அவரது இல்லத்தை நோக்கி போராட்டக்காரர்கள் வந்த நிலையில், அவர் அங்கிருந்து வெளியேறினார். சிறப்பு விமானம் மூலம் அவர் டெல்லி அருகே உள்ள காசியாபாத்திற்கு வந்துள்ளார். அவர் விரைவில் லண்டன் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறினாலும் கூட இன்னும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர் ஹசீனா கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர்களின் வீடுகள் சொத்துகளைக் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதன்படி கிரிக்கெட் தலைவரின் குடியிருப்பில் தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதல்: வங்கதேச கிரிக்கெட் கவன்சிலின் தலைவராக இருப்பவர் நஸ்முல் ஹசன். இவர் இப்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஹசீனாவின் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர் கடந்த 2009ம் ஆண்டு முதலே இவர் எம்பியாகவும் இருந்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் அங்கு நடந்த பொதுத்தேர்தலிலும் நஸ்முல் ஹசன் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருந்தது. விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கிடைத்தால் விரைவில் அவர் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், அவர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை.
இந்தச் சூழலில் தான் நஸ்முல் ஹசனின் பைரவ் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் சர்வதேச அளவில் நல்ல இடத்திற்கு வர இவரது முன்னெடுப்பும் முக்கிய காரணமாகும். இதற்கிடையே அங்கு இப்போது நிலவும் சூழலில் அவரது இல்லத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக்குச் சிக்கல்: வங்கதேசத்தில் வரும் அக். 3 முதல் 20ம் தேதி வரை மகளிருக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இருப்பினும், இப்போது வங்கதேசத்தில் நிலவும் மோசான நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கிருந்து உலகக் கோப்பை தொடரை மாற்றுவது குறித்து ஐசிசி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா அல்லது வேறு எதாவது ஒரு நாட்டிற்கு உலகக் கோப்பை மாற்றப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications