இஸ்லாமிய நாடாக மாறும் வங்கதேசம்? "90% முஸ்லீம் தான்.." மதச்சார்பின்மையே இருக்கக் கூடாதாம்.. சர்ச்சை!
டாக்கா: நமது அண்டை நாடான வங்கதேசத்தில் என்ன தான் இஸ்லாமியர்கள் மக்கள்தொகை தான் அதிகம் என்றாலும் அது மதச்சார்பற்ற நாடாகவே இத்தனை காலம் இருந்து வருகிறது. இதற்கிடையே வங்கதேசத்தில் 90% இஸ்லாமியர்கள் இருப்பதால் மதச்சார்பற்ற என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் அசாதுஸ்மான் கூறியிருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது.
இந்தியாவின் கிழக்குப் புறத்தில் நமது அண்டை நாடாக இருப்பது வங்கதேசம். இந்த நாட்டில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

வங்கதேசம்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கு எதிராக அங்கு மிகப் பெரிய போராட்டம் நடந்த நிலையில், அது வன்முறையாகும் மாறியது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து இப்போது அங்குத் தற்காலிக அரசு ஒன்று நடந்து வருகிறது. இதற்கிடையே வங்கதேசத்தை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி அங்குக் குரல்கள் எழுந்துள்ளன.
இஸ்லாமிய நாடாக மாறுகிறதா: அதாவது வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் தான் பெரும்பான்மை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும் வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடாகவே இருக்கிறது. இதை அந்நாட்டின் அரசியலமைப்பும் உறுதி செய்கிறது. இதற்கிடையே வங்கதேசத்தில் 90% இஸ்லாமியர்கள் இருப்பதால் மதச்சார்பற்ற என்ற வார்த்தையை அரசியலமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் அசாதுஸ்மான் கூறியுள்ளார். இது பேசுபொருள் ஆகியுள்ளது.
வங்கதேச அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்கத் திருத்தங்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அந்நாட்டுச் சட்டத்தின் 15வது திருத்தம் குறித்து நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அட்டர்னி ஜெனரல் எம்.டி. அசாதுஸ்ஸாமான் இந்த வாதங்களை முன்வைத்தார். கடந்த 2011ம் ஆண்டில் வங்கதேச அரசியலமைப்பில் 15வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தேசியவாதம், சோசலிசம், ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை நான்கு அடிப்படை கொள்கைகளாகக் குறிப்பிடப்பட்டது.
வாதம்: இந்த சட்ட திருதத்திற்கு எதிரான வழக்கிலேயே மதச்சார்பற்ற என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் அட்டானி ஜெனரல் வலியுறுத்தினார். மேலும், அவர் கூறுகையில், "முன்பு, கடவுள் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. முன்பு இருந்த அதே நம்பிக்கை எங்களுக்கு இப்போதும் தேவை. அனைத்து மதங்களின் நடைமுறையிலும் சம உரிமை மற்றும் சமத்துவத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று 2Aவில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிரிவு 9 என்பது 'வங்காள தேசியவாதம்' குறித்துப் பேசுகிறது. இவை இரண்டும் முரண்பாடானது.
ஜனநாயகத்தைக் குலைக்கக்கூடிய திருத்தங்கள் அல்லது தடைகளைச் செய்யக்கூடாது என்று பிரிவுகள் 7A மற்றும் 7B கூறுகின்றன. இது நாட்டில் தேவையான சீர்திருத்தங்கள் செய்வதைத் தடுக்கிறது. ஜனநாயகத்தைக் குழிபறிக்கிறது. மறைமுகமாகச் சர்வாதிகாரத்தைக் கொண்டு வரவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது.
எதிர்ப்பு: அதேபோல முன்பு தேர்தல் நடைபெறும் போது தேர்தல்களைக் காபந்து அரசு தான் மேற்பார்வையிடும். ஆனால், காபந்து அரசு அமைக்கும் முறையையும் அகற்றி இருக்கிறார்கள். இது வங்கதேச மக்களின் உரிமைகளைக் குலைப்பதாக இருக்கிறது. மேலும், பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நாட்டின் ஜனநாயக அடித்தளத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது" என்றார்
ஷேக் முஜிபுர் ரஹ்மானை தேசத்தின் தந்தை என்று அங்கீகரித்தது உட்பட பல திருத்தங்கள், வங்கதேசத்தைப் பிளவுபடுத்துவதாகவும், பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் இருந்ததாகத் தெரிவித்தார். ஷேக் முஜிபுரின் பங்களிப்புகளை மதிப்பது இன்றியமையாதது என்ற போதிலும் அதைச் சட்டத்தால் அமல்படுத்துவது பிரிவினையை உருவாக்குகிறது என்று அவர் வாதத்தை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications