வங்கதேசத்தில் புது கிளர்ச்சி! சிக்கலில் முகமது யூனுஸ்.. மாணவர் அமைப்பு கொடுத்த ட்விஸ்ட்
டாக்கா: வங்கதேசத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, ஷேக் ஹசினாவை ஆட்சியை விட்டு விரட்டிய மாணவர் அமைப்பினர் தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். இது, தற்போது ஆட்சியை நடத்தி வரும் முகமது யூனுஸுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.
முகமது யூனுஸ் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரே புள்ளியில் வைத்து பார்த்து வருகிறார். எனவே இரண்டு நாடுகளிடமும் நட்பு பாராட்டாமல் இருக்கிறார். இப்படி இருக்கையில், மாணவர் அமைப்பினர் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருப்பது, யூனுஸ் ஆட்சிக்கான முடிவுரையாக பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் என்ன பிரச்சனை?:
வங்கதேசம் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது. ஆனால் மொழிப்பிரச்சனையால் வங்கத்தில் கிளர்ச்சி தொடங்கியது. இதனையடுத்து 1971ல் சுதந்திர போராட்டம் வெடித்தது. இப்படியாக வங்கதேசம் உருவானது. இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் இது கலகமாக வெடித்தது.
மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்றனர். பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய பிரச்சனையை, துப்பாக்கியை கொண்டு அணுகினார் ஷேக் ஹசீனா. விளைவு.. கலகம் கிளர்ச்சியாக பரிணமித்தது. ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வங்கதேசம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து ஹசீனா உயிரை கையில் பிடித்துக்கொண்டு, துண்டை காணோம், துணியை காணோம் என இந்தியாவுக்கு ஓடி வந்துவிட்டார்.
ஹசீனாவுக்கு உதவிய இந்தியா:
அடுத்து ராணுவம் முழு அதிகாரத்தையும் கையில் எடுத்தது. இடைக்கால அரசு நியமிக்கப்படுவதாகவும், அதன் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இருப்பார் எனவும் அறிவிப்புகள் வெளியாகின. புதிய அரசு எப்படி வங்கதேச மக்களை ஆள போகிறது? என கேள்விகள் எழுந்தன. ஆனால் யூனுஸ் இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக அணுகினார். அதாவது அவரை பொறுத்தவரை வங்கதேசத்தை ஒரு கட்டத்தில் அடக்கி ஆண்ட பாகிஸ்தானும், தேச வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியாவும் ஒன்றுதான்.
மாணவர் அமைப்பினர்:
எனவே அவர் பொருளாதார உறவுக்காக சீனாவை நாட தொடங்கினார். சீனாவின் வளர்ச்சி உலகுக்கே தெரியும். 'பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும்' என்பது அவரது யோசனை. சீனாவும் சில விஷயங்களில் வங்கதேசத்திற்கு உதவுவதாக வாக்குறுதியளித்திருக்கிறது. அடுத்து என்ன நாட்டை வளர்ச்சி பாதையில் செலுத்த வேண்டியதுதானே! என்ற பலரும் கேள்வி எழுப்ப, ஹசீனாவை விரட்ட காரணமாக மாணவர் அமைப்புக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க யூனுஸ் முன் வந்தார்.
புதிய கட்சியை உருவாக்கிய மாணவர்கள்:
ஆனால், மாணவர் அமைப்பினர் அதை ஏற்கவில்லை. மறுபும் மாணவர்கள் எதற்காக போராட்டம் நடத்தினோம் என்பது குறித்த கொள்கையை பொதுவெளியில் அறிவிக்க முன்வந்தனர். யூனுஸ் தலைமையிலான புதிய அரசு இதை ஏற்கவில்லை. இப்படி இருக்கையில் மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். இதற்கு 'தேசிய குடிமக்கள் கட்சி' என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இந்த கட்சியின் குறிகோள் பாகுபாடற்ற சமத்துவத்தை உருவாக்குவதுதான் என்று கூறியுள்ளனர்.
கட்சியின் நோக்கம்:
தற்போது நடைமுறையில் இருக்கும் வங்கதேச அரசியல் சாசனத்தை ஒழிப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அரசியல் கட்சி யாருக்கு நெருக்கடிய ஏற்படுத்துமோ இல்லையோ, ஆனால் நிச்சயம் யூனுஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை யூனுஸ் கையில் எடுத்ததால், அவருக்கு எதிராக மாணவர்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இந்த அரசியல் கட்சி வங்கதேச அரசியலை புதிய செழுமைக்கு இட்டுச்செல்லும், புதிய புதிய கட்சிகள் போட்டியிடுவதால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என்றும் சிலர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் வங்கதேசம் வளர்கிறதா? அல்லது இன்னும் பின்னடைவை சந்திக்கப்போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications